Skip to main content

ஏ.டி.எம்மில் பணம் செலுத்த உதவுவதாக கூறி ரூ.49,500 அபேஸ்; பட்டதாரி இளம்பெண் கைது!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

claiming to help pay at ATM; Graduate women arrested!

 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள குன்னூர் பகுதியில் வசித்து வருபவர், முதியவரான நாகராஜ். தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஜவுளிக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வழக்கம்போல கடையின் வரவு செலவிற்காக தேனி பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்றுள்ளார். வங்கியில் அதிக அளவு கூட்டம் இருந்ததால், வெளியே இருந்த பணம் செலுத்தும் ஏடிஎம் மையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளம்பெண் ஒருவர், பணம் செலுத்துவதற்கு தான் உதவி செய்வதாக நாகராஜிடம் கூறி, ரசீது வராத இயந்திரத்தில் ரூபாய் 50 ஆயிரம் பணத்தைப் போட்டுள்ளார். அதில் ஒரு 500 ரூபாய் தாளை மட்டும் இயந்திரம் எடுத்துக் கொள்ளாததால் மீதமிருந்த ரூபாய் 49,500 மட்டும் கணக்கில் செலுத்தப்பட்டதாக அந்த இளம்பெண் நாகராஜிடம் கூறியுள்ளார். 

 

இதையடுத்து ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு வந்த நாகராஜ், ஜவுளிக்கடை நிறுவனத்தின் வங்கிக் கணக்கை சரி பார்க்கையில் ஏடிஎம் இயந்திரத்தில் செலுத்தப்பட்ட தொகை வரவு ஆகாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வங்கி நிர்வாகத்திடம் கேட்கையில், சம்பவத்தன்று பணம் ஏதும் ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலாக பெறப்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேலாளர் நாகராஜ், தேனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. இதில் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நாகராஜ் கொடுத்தப் பணத்தை இயந்திரத்தில் செலுத்துவது போல நடித்து, அவர் சென்றதும் பணத்தை இளம்பெண் எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

 

claiming to help pay at ATM; Graduate women arrested!

 

அதன் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன்  என்பவரின் மனைவி மணிமேகலை (23) மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்ததை இளம்பெண் மணிமேகலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து பணம் ரூபாய் 49,500 கைப்பற்றப்பட்டது. கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியே வசித்து வரும் மணிமேகலை இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி ஆவார். 

 

இதேபோன்று விருதுநகர் மற்றும் உசிலம்பட்டி பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்துபவர்களுக்கு உதவுவது போல நடித்து மோசடி செய்ததாக  காவல்துறையினரால் மணிமேகலை  கைது செய்யப்பட்டிருப்பதும்  தெரிய வந்தது. மேலும் தற்போது போடி பகுதியில் இருந்தும் சிலர் இதுபோன்று தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தேனி காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். 

 

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், வழக்குப் பதிந்து மணிமேகலையை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வருபவர்களிடம் உதவி செய்வதாகக் கூறி இளம்பெண் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.