Skip to main content

மாவட்ட தொழிலாளர் நலவாரியங்கள் முன் சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

 

நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தவும், அரசு அறிவித்த கரோனா ஊரடங்குகால நிவாரணத்தை நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கக்கோரியும் தென்சென்னை சிஐடியு சார்பில் தி.நகரில் உள்ள சென்னை மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டோர், “இந்திய தொழிற்சங்கம் மையம் சி.ஐ.டி.யு. சார்பாக மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து தொழிலாளர் ஆணையம் முன்பாக தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கரோனா நிவாரண நிதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல்வேறு குளறுபடியால் நிவாரண நிதி கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர். இவர்களிடம் அனைத்துவிதமான ஆவணங்களும் சரியாக இருந்தபோதிலும் அரசு நிவாரணம் வழங்கவில்லை. இதனை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று கோட்டுகொள்கிறோம். ஆன்லைன் பதிவை அறிவித்தார்கள். ஆனால், ஆன்லைன் பதிவை அறிவித்தப்பிறகு சான்றிதழ்களை நேரடியாக வாங்க மறுக்கிறார்கள்.

 

நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் வாங்க வேண்டும் என்று கேட்கிறோம். ஆன்லைன் முறையை அறிமுகம் செய்து இதுவரை அதில் ஏழு முறை மாற்றம் செய்துவிட்டனர். இருந்தபோதிலும் இன்னும் அதில் சிலவற்றுக்கு படிவங்கள் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் அதில் பதிவு செய்வது. மேலும் சி.ஐ.டி.யு சங்கத்தின் மூலம் பதிவு செய்தால் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், ஏஜெண்டுகள் மூலம் பதிவுசெய்தால் உடனடியாக பதிவுசெய்யப்பட்டு கார்ட் வருகிறது. இது தற்போது நடக்கும் விவசாயிகள் நிவாரணம் நிதி முறைகேடு போன்று உள்ளதாக சந்தேகிக்கீறோம். அப்படி எங்கள் சந்தேகம் ஞாயமற்றது என்று இந்த அரசு நினைத்தால், உடனடியாக கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகத்தை முறைபடுத்த வேண்டும். ஆனால், கண்காணிப்பு குழு கூட்டமே நடத்துவதில்லை.

 

தலைமையில் கேட்டால் பணம் வழங்கிவிட்டோம் என்கிறார்கள். இங்கு வந்து கேட்டால் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டோம் என்கிறார்கள். சரி பணத்தை திருப்பி அனுப்பியதற்கான ஆதாரத்தை கொடுங்கள் என்றாலும் கொடுக்க மறுக்கிறார்கள். பணத்தை திருப்பி அனுப்ப இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. 150 ஆட்டோ தொழிலாளர்களின் சான்றிதழ்களை ஏழாவது முறையாக கொடுக்கிறோம் இருந்தும் பணம் வழங்கவில்லை. இதையெல்லாம் கண்டித்துதான் இன்று தமிழகம் முழுக்க இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யு. கையில் எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

‘16 வருடமாகப் பார்த்து வந்த வேலை நாளையிலிருந்து இல்லை’ - பணியாளர்கள் கவலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Trichy 120 sanitation workers sacked from tomorrow

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.