Skip to main content

“ஏழு தமிழர் விடுதலையில் முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்” - வெங்கட்ராமன்

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

"Chief plays a double role in the release of seven Tamils" - Venkatraman

 

7 தமிழர் விடுதலை குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தனது சட்டக் கடமையை முற்றிலும் மீறி ஏழு தமிழர் விடுதலை குறித்து தான் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

உச்ச நீதிமன்றத்தில் தனது முன்விடுதலை கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், நீதிபதி நாகேசுவரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை அளித்தப் பரிந்துரையின் மீது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தார்.

 

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கறிஞர், ஆளுநர் மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று முதலிலும், அடுத்தநாள் ஒருவாரத்தில் முடிவெடுப்பார் என்றும் பதிலுரை தாக்கல் செய்தார். இந்நிலையில், 2021 ஜனவரி 25ஆம் நாளிட்ட தனது கடிதத்தின் வழியாக ஆளுநர், இதுகுறித்து தான் முடிவெடுக்க முடியாது. தொடர்புடைய அதிகாரமுள்ளவர் குடியரசுத் தலைவர்தான் என்று தெரிவித்துவிட்டதாக 04.02.2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கறிஞர் பதிலுரை அளித்திருக்கிறார்.

 

அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 163-இன் படி, ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். அவருக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு அதிகாரமும் கிடையாது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோக்கித்தின் இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்குரிய தகுதியை இழந்துவிட்டார். 

 

ஏழு தமிழர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, சட்டமன்றத்தில் பதிலுரைத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் கடந்த 2021 ஜனவரி 29 அன்று ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்கிறார்கள் என்றும் கூறினார்.

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரைச் சந்தித்தது ஜனவரி 29ஆம் நாள், ஆனால் ஆளுநரோ ஜனவரி 25ஆம் நாளே ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, தனது பதிலுரையை அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணமும் அதை உறுதி செய்கிறது. அப்படியானால், ஜனவரி 29 அன்று தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் ஆளுநர் இந்த உண்மையை மறைத்திருக்கிறாரா? அல்லது ஆளுநர் இந்த உண்மையைச் சொன்ன பிறகும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லியிருக்கிறாரா என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும். 

 

இந்த விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை தொடர்ந்து கூறிவருகிறோம். பேரறிவாளன் தொடர்பான பரோல் வழக்கில் கூட, அவரை சிறை விடுப்பில் விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டது. அதனைப் புறக்கணித்து, உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கியது. எடப்பாடி பழனிசாமி அரசின் அணுகுமுறைக்கு இது சான்று கூறுகிறது. 

 

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து இப்போதாவது உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். ஆளுநரின் அப்பட்டமான இந்த சட்டமீறல் அவரது தமிழினப் பகைப்போக்கை வெளிப்படுத்துகிறது.

 

இந்நிலையில், ஏற்கெனவே அன்றைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆணையம் 2015ஆம் ஆண்டு டிசம்பரில் உறுப்பு 161இன் படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரை பெற்று ஆளுநர் இராஜீவ்காந்தி வழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு உறுப்பு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும், மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வழி ஏற்படுத்த வேண்டும்.

 

இந்திய அரசு, தனது தமிழினப் பகை நோக்கை செயல்படுத்துவதற்காக எந்த அளவுக்கு சட்ட மீறலில் ஈடுபடும் என்பதையும், தமிழ்நாடு அரசு பா.ஜ.க. அரசோடு தனக்குள்ள கீழ்நிலை உறவுக்காக தமிழர் உரிமையை மட்டுமின்றி, தனது அமைச்சரவைக்கு உள்ள சட்ட உரிமையை பலியிடும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

 

இந்நிலையில் நடந்த உண்மை என்ன என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டுமென்றும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு உண்மையாக செயல்பட வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.