சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (23/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய புதிய கைபேசி செயலி, துணிநூல் துறை என்ற புதிய துறை உருவாக்கம், இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம், 'கற்பகம்' என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் நவீன் கண்ணாடி பாட்டில்களில் தேன் விற்பனை, ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம் எனும் நான்கு வகையான நறுமணங்களில் புதிய வகை குளியல் சோப்புகள், கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆடை ரகங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 'தமிழ்த்தறி' என்ற தொகுப்பு ஆடைகளை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியால் புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களைப் பெற்ற கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களைப் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர், கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர்துறை முதன்மைச் செயலாளர், கைத்தறி மற்றும் துணி நூல் ஆணையர், கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.