திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்திற்கு நவம்பர் 11 ஆம் தேதி வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் திமுகவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க திமுகவினர் தீவிரமாக உள்ளார்களாம்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்கு ஒரு நாள் முன்பு 10 ஆம் தேதி ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அதனை முடித்துவிட்டு , அதற்கு அடுத்த நாள் 11 ஆம் தேதி காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் திமுகவினர், முதல்வரின் வருகை, தங்குமிடம் மற்றும் பிரதமரை வரவேற்கும் இடம் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ததோடு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தனர். ஆய்வின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன் உட்பட பல கட்சிப் பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.