Skip to main content

'அந்த அளவிற்குப் பெரும் சேதம் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது' - கடலூரில் முதல்வர் பழனிசாமி பேட்டி!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Chief Minister Edappadi interview in Cuddalore!

 

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் 'நிவர்' புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இதை எதிர்கொள்ள மாவட்ட மக்களும் விவசாயிகளும் தயாராகவே இருந்தனர்.

 

காரணம் புயல் பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக மேற்படி மாவட்டங்களில் போதிய அளவு மழை இல்லாததால், பல ஆண்டுகளாக ஓடைகள், கண்மாய்கள், ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயம் பொய்த்துப் போய் கோடைக் காலங்களில் குடிநீருக்கே மக்கள் காலிக்குடங்களுடன் தெருவில் இறங்கிப் போராடும் நிலை இருந்து வருகிறது.

 

ss

 

இதனால் விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளிகளும் பல்வேறு மாநிலங்களுக்கும் ஊர்களுக்கும் புலம்பெயர்ந்து சென்று வாழ்கிறார்கள். அந்த மக்கள் தற்போதைய 'நிவர்' புயல் காரணமாகப் போதிய அளவு மழைபெய்யும், அதன்மூலம் வெள்ளப் பெருக்கெடுத்து, ஆறுகள், ஏரிகள் நிரம்பும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடும், ஆவலோடும் வெளியூர்களில் வெளிமாநிலங்களுக்குச் சென்று இருந்தவர்கள் கூட அதிக அளவு மழைபெய்து ஏரி குளங்கள் நிரம்பினால், தங்கள் ஊருக்கு வந்து விவசாயம் செய்வதற்கு தயாராக இருந்தனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிவர் புயல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. 

 

sss

 

புயலால் ஏற்படும் இழப்புகளைத் தாங்கிக் கொள்ளத் தயாராகவே இருந்தோம். புயலால் பெய்யும் மழையினால் ஆண்டுமுழுவதும் விவசாயம் செய்யவும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு மழை வெள்ளம் வரும் என்று ஆவலோடு ஆறுகளையும் ஓடைகளையும் வைத்தகண் வாங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது புயல் மழை என்று வருத்தத்துடன் கூறுகின்றனர். விவசாயிகளும் பொதுமக்களும் அடுத்து வரும் புயல் மூலம், எதிர்பார்ப்பை மழையாக அளிக்குமா என்று அனைத்துத் தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். பத்திரிகை ஊடகங்கள் மத்தியில் இருந்த புயல் பற்றிய செய்திகள் பரபரப்பாக வலம் வந்தன. அதனால், பொதுமக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் எந்தவிதப் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தவே இல்லை.

 

ddd

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சுமார் 3 மணி அளவில் கடலூர் விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும், விவசாயிகளையும் சந்திப்பதற்காக அவசரப் பயணமாகப் புறப்பட்டு வந்தார். கடலூரில் புயல் நிவாரண பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களையும் நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், கடலூர் வழியில் ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை நேரில் பார்வையிட்டு, வாழை பயிரிட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

Chief Minister Edappadi interview in Cuddalore!

 

தேவனாம்பட்டினம் முகாமில் தங்கியிருந்த மக்களிடம் அவர்கள் குறைகளைக் கேட்டறிந்ததோடு, நிவாரண உதவிகள் பொருட்களையும் வழங்கினார். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் முதலமைச்சர் சேத விவரங்களைக் கேட்டறிந்தார். கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு நேரில் சென்ற முதலமைச்சர், மீனவ மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

 

அப்போது, மீனவ மக்கள் புயலால் சேதமான படகுகளுக்கு நிவாரணம் வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இப்படிப் பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்கள் மத்தியில், நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முழுவீச்சில் தயாராக இருந்தது. மாவட்ட ஆட்சியர்களுக்கு முழுமையான அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி அனைத்துத் துறை அதிகாரிகளும் மிகவும் விழிப்புடன் கண்காணிப்பில் இருந்தனர். கடலூரில் புயல் கரையைக் கடக்கும் போது சேதம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதை எதிர்கொள்ளத் தயாராகவே  இருந்தோம்.

 

Chief Minister Edappadi interview in Cuddalore!

 

ஆனால் அந்த அளவிற்குப் பெரும்சேதம் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. சுமார் 2.5 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவுகள் உட்பட அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்துகொடுத்துள்ளனர். அதேபோல் விவசாயிகளின் பயிர்கள் இந்தப் புயல் பாதிப்பினால் சேதம் அடைந்திருந்தால், அதற்கான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து இருந்தால், அவர்களுக்கான இழப்பீடு பெற்றுத் தரப்படும். இந்த நிவர் புயல் பாதுகாப்புப் பணியில் மிகவும் விழிப்புடன் அயராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், அரசு அலுவலர்கள் ஊழியர்கள், காவல்துறையினர் உட்பட அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.