chidambaram medical college students

தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 45 நாட்களாக 1,300 மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து 47 நாட்களாக நூதன முறையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தையும் தடை செய்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக், மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கண்காணிப்பாளர் நிர்மலா உள்ளிட்டோர் போராட்டக் களத்தில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வரும் ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மணிமண்டபம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நல்ல முடிவு எடுப்பதாக உறுதியாகக் கூறினார். அதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதற்கு மாணவர்கள் நாங்கள் அமைதியான முறையில் இங்கே அமர்ந்து இருக்கிறோம் என்றும் மாணவ பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் சென்னையில் அமைச்சரைச் சந்தித்து நல்ல முடிவை அறிவித்தால் நாங்கள் நிரந்தரமாகப் போராட்டத்தை கைவிடுகிறோம் என்றனர். ஆனால் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்வதாகக் கூறினார் அதனை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மாநில துணைத்தலைவர் புலிகேசி, மாவட்ட செயலாளர் குலோத்துங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் அரசு சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 14,000 மருத்துவர்களும் ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும் என கூறியுள்ளனர்.