மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 45 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அறவழியில் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் மருத்துவ மாணவர்களை கல்லூரி விடுதி மற்றும் கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டுமென நெருக்கடி கொடுத்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து மாணவர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் விடுதியில் உணவு வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டு விடுதியும் பூட்டப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் போராட்டக்களத்தில் கையில் தட்டு ஏந்தி, உணவு கேட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் வாஞ்சிநாதன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல் உள்ளிட்டவர்கள் மாணவர்களின் போராட்டக் களத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
'மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை அச்சுறுத்தக் கூடாது என்றும் மாணவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து, விடுதியை விட்டு மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது என்றும் மனு அளித்தனர்.
இதேபோல் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகனும் தி.மு.க. நிர்வாகியுமான கதிரவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.