Skip to main content

குடியிருப்பு பகுதிகளுக்குள் தஞ்சம் புகும் முதலைகளால் பொதுமக்கள் பீதி!!!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Chidambaram kollidam river Public panic over crocodiles taking shelter in water bodies outside residential area ...!
                        ஓடை கரையில் ஓய்வெடுக்கும் முதலை

 

 

காட்டுமன்னார்கோவிலுக்கு உட்பட்ட கிராம பகுதிகளின் நீர் நிலைகளில் கடந்த சில நாட்களாக முதலைகள் தஞ்சமடைந்துவருகின்றன. முட்டம் வடக்கு ராஜன்வாய்க்கால், வடவாறு ஜீரோபாய்ண்ட், ம.ஆதனூர் உள்ளிட்ட பொதுமக்களின் புழக்கத்தில் இருக்கும் பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறிய முதலைகள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று வீராணம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியாகும் வெள்ளியங்கால் ஓடையில் எள்ளேரி பகுதி ஓடை கரையில் சுமார் ஆறு அடி முதலை, காலை வேளையில் வெயிலுக்காக படுத்துகிடந்தது. இதை பார்த்த அந்தப் பகுதி மக்கள், சிதம்பரம் வனத்துறை மற்றும் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

 

தகவலின்பேரில் அங்குவந்த வீரர்கள், முதலையை பிடிக்க முயன்றனர். அப்போது, முதலை தண்ணீருக்குள் நீந்தி சென்றுவிட்டது. இது பற்றி அந்தப் பகுதியில் மக்கள் கூறியதாவது; ஆண்டுதோறும் மழைக் காலங்களில் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுவதோடு கிராமத்தில் மேயும் ஆடுகளை வேட்டையாடிவருகிறது. இந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகளும் அவ்வபோது தனியார் நபர்களை வைத்து பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்கராமரி குளத்தில் விடுவது வழக்கம். இதனால், சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரியில் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர் என்று தெரிவித்தனர்.

 

பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாக நெய்வேலி பகுதியில் முதலைப் பண்ணை அமைத்து இருப்பதாக தெரிகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் முதலை பண்ணை அமைத்தால் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறும் முதலைகளை பிடித்து அப்புறப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.