Skip to main content

நள்ளிரவில் செல்லும் 'கார்' பயணிகள் குறிவைக்கப்படுகிறார்களா? - எஸ்.பி. எச்சரிக்கை!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

chennai trichy and vikravaandi highways bike car theft video is fake

 

ஒரு வீடியோ காட்சி பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. அந்த வீடியோ காட்சியில், " ‘சென்னை - திருச்சி', 'விக்கிரவாண்டி - உளுந்தூர்பேட்டை' ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்பவரா நீங்கள்? அப்படியென்றால் எச்சரிக்கை! விக்கிரவாண்டி உளுந்தூர்பேட்டை இடையே, நள்ளிரவு கார் பயணத்தின்போது, பின்தொடர்ந்துவந்த மர்ம நபர்கள் காரை சேதப்படுத்துகின்றனர். சத்தம் கேட்டு கார் ஓட்டுனர், காரை விட்டு இறங்கியதும் அவரை அடித்துப் போட்டுவிட்டு காரில் உள்ள பெண்கள் மற்றும் அங்குள்ளவர்களிடம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறது அந்தக் கும்பல்" இவ்வாறு அந்த வீடியோ காட்சி இருக்கிறது.

 

இதேபோல, ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்ததாக, ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அடுத்து வீடியோவை வெளியிட்டிருந்தார். தன்னுடைய மாமனார் காரில் செல்லும்போது இதுபோன்ற சம்பவம் நடந்தது என்றும் அவர் காரை நிறுத்தாமல் வேகமாகத் தப்பிச்சென்று விட்டதாகவும் அந்த வீடியோ, ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால், உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், காரில் பயணம் செய்பவர்கள் அச்சப்பட்டனர். இந்த ஆடியோ, வீடியோ தகவல்கள் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவுப்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் இது தவறான தகவல் என்றும் தெரியவந்தது. மேலும், அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலைத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டும். அப்படி எந்தப் புகாரும் காவல் நிலையங்களில் பதிவாகவில்லை. நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் உள்ளனர். அவர்கள் அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. ராதாகிருஷ்ணன் “விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை காரில் செல்பவர்களை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து (முகமூடி அணிந்து) வரும் நபர்கள் வழிப்பறி செய்வதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது தவறான தகவல். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். 


அந்த வீடியோவையும் ஆடியோவையும் யாரும் நம்பவேண்டாம். அவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை செய்துள்ளார். 

 

சமூக வலைதளங்களில் சம்பந்தமே இல்லாமல், எப்போதோ எங்கோ நடந்த சம்பவங்களை சமீபத்தில் நடந்ததாகக் கூறி வெளியிடுகிறார்கள். அவைகளை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் அந்தச் சம்பவம் உண்மையா? எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பதைப் பற்றி எந்தவிதமான ஆய்வும் செய்யாமல், அப்படியே பல்வேறு குழுக்களுக்கும் பரப்புவது வாடிக்கையாக உள்ளது. 

 

cnc

 

இதனால், பொய்ச் செய்திகள் அதிக அளவில் பரவுகின்றன. அதேசமயம், உண்மையான செய்திகள் வரும்போது அதை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். காவல்துறையினர், இதுபோன்ற பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை வெளியிட்டு வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.