Skip to main content

''இதுதான் சார் கோபம்...'' காதல் மனைவி தற்கொலை... உடலைக்கூட பார்க்காமல் கணவனும் தற்கொலை... 

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

chennai pallavaram

 

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கணவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, உடலைக்கூட பார்க்க முடியாமல் இருந்த அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை பல்லாவரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான பிரவின்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஈசா பல்லாவரத்தை சேர்ந்த 19 வயதான தீபிகா என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தங்களது வீட்டில் இதனை தெரிவித்துள்ளர். பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.  

 

திருமணத்திற்கு பிறகு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பல்லாவரம் காவல்நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு வேண்டும் என்று முறையிட்டனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்தனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று பிரவீன்குமார் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர். 

 

ஆடி மாதம் என்பதால் பெரியோர்களின் ஆலோசனைப்படி, தீபிகாவை கடந்த 20ஆம் தேதி அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்துள்ளார். தொடர்ந்து பிரவீன்குமார் தனது வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தார். 

 

இந்தநிலையில் தீபிகா, 30-ந் தேதி வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான தகவல் பல்லாவரம் போலீசாருக்கு கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். 

 

பெண்ணின் தந்தை சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில், பல்லாவரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வந்தார். திருமணம் ஆகி இரண்டரை மாதங்களில் தீபிகா இறந்ததால் இதுபற்றி தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

 

இதனிடையே போலீசார், பிரவின் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தீபிகா என்னிடம் அன்பாக இருந்தார். அவரது தாய் வீட்டுக்கு சென்றபிறகு அங்கு இருந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். வேலையாக இருந்ததால் போனை எடுக்காததால், போன் செய்யும்படி எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ஆனால் நான் வேலையில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. இதுதான் சார் கோபம். அந்த கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

 

தீபிகாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிரவீன்குமார் முயன்றார். ஆனால் பெண் வீட்டு தரப்பில் கோபமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் ஆறுதல் கூறினர். திங்கட்கிழமை (இன்று) காலை கோட்டாட்சியர் விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

 

காதல் மனைவி  இறந்த சோகம் தாங்காமல் பிரவின்குமார், நேற்று குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

காதல் திருமணம் செய்த தம்பதிகள், அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.