Skip to main content

மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீட்டினை மேற்கொள்ள சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி நியமனம்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

chennai merina beach shops chennai high court

 

மெரினாவில் 900 தள்ளுவண்டிக் கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள, சிக்கிம் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதீஷ்குமார் அக்னிகோத்ரியை, சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

 

மெரினா அழகுபடுத்துதல், புதிய மீன் அங்காடி அமைத்தல், நடைபாதை மற்றும் நடைமேம்பாலம் அமைத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் இன்று (15/12/2020) விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மெரினாவில் ஏற்கனவே இருந்த கடைகளுக்கு மாற்றாக புதிய கடைகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 6- ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதுடன், அவற்றை ஒதுக்கீடு செய்து வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

 

மேலும் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில், புதிய மீன் அங்காடி மற்றும் மீனவர்கள் லூப் சாலையைக் கடக்காமல், கடற்கரையை அணுகுவதற்கு நடைமேம்பாலம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டபோது, கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதாகவும், அவற்றிற்கு மாநகராட்சி பதிலளித்து உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

chennai merina beach shops chennai high court

 

அதனடிப்படையில், மத்திய அரசுதான் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்கவும் அறிவுறுத்தினர்.

 

அப்போது, நடைபாதை வியாபாரிகள் தரப்பில், மெரினாவில் 1200- க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் ஈட்டிய நிலையில், 900 பேருக்கு மட்டுமே மாநகராட்சி கடைகளை ஒதுக்க உள்ளதாகவும், மற்றவர்களையும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

அப்போது நீதிபதிகள், 900 கடைகளில் ஒதுக்கீடு கிடைக்காதவர்களுக்குச் சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி வேறு தகுந்த இடங்களை மாநகராட்சி கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெளிவுபடுத்தினர்.

 

900 தள்ளுவண்டிக் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை, ஜனவரி 20 மற்றும் 21- ஆம் தேதிகளில் மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதிகள், அந்தப் பணிகளை மேற்கொள்ள, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்து ஓய்வுபெற்ற சதீஷ்குமார் அக்னிகோத்ரியை நியமித்தும் உத்தரவிட்டனர்.

 

வழக்கு விசாரணையை, ஜனவரி 8- ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் 900 தள்ளுவண்டிக் கடைகளில், முதற்கட்டமாக 300 வண்டிகளைக் கொள்முதல் செய்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.