HIGHCOURT

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு திருமணம் செய்துகொண்ட பெண்ணும், அவரது தந்தையும், இன்று நேரில் ஆஜராகி, பெண் தனது சொந்த விருப்பத்திலேயே சென்றதாக தன்னிலை விளக்கமளித்ததைத் தொடர்ந்து, பெண் மேஜர் என்பதால் கணவருடன் செல்ல அனுமதித்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

கள்ளக்குறிச்சி தனி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் பிரபுவும், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருச்செங்கோடு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். இந்நிலையில், பிரபு - சௌந்தர்யா திருமணம் முடிந்ததாக, அவர்களின் புகைப்படமும், சௌந்தர்யா வீட்டில் மறுத்ததால், வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழுமனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு பேசிய வீடியோவும் வெளியானது.

Advertisment

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்தே, தன் மகளைக் கடத்தியிருப்பதாகவும், அவர்களிடமிருந்து மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரியும், சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்க மறுத்த காவல்துறை, சாமிநாதனை பொது இடத்தில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்டதாகவும், மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை சுவாமிநாதன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.அதில், படிக்கும் பெண்ணிடம் எம்.எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி, ஏமாற்றி கடத்திவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென சுவாமிநாதன் தரப்பில், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வில் முறையிடப்பட்டது. வழக்கைப் பட்டியலிடும் படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால், வழக்கு விசாரணைக்கு வராததால், மீண்டும் முறையிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் இன்று சம்பந்தப்பட்ட பெண்ணையும் அவரது தந்தையையும் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

Ad

அதன்படி, இன்று நீதிபதிகள் முன்பு தந்தையும் மகளும் நேரில் ஆஜராகினர். அப்போது, யாரும் தன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லவில்லை என்றும், தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே, தான் மணமுடித்த கணவருடன் சென்றதாகவும், சௌந்தர்யா தன்னிலை விளக்கமளித்தார். அதைப் பதிவு செய்த நீதிபதிகள், பெண் மேஜர் என்பதால் சட்டப்பூர்வமாக அவரது சொந்த விருப்பத்தின் பேரில் கணவருடன் செல்ல அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தனர்.