Skip to main content

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

Published on 05/06/2020 | Edited on 06/06/2020
chennai highcourt

 

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை  ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மீட்டுவர, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா முகமது தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், சர்வதேச விமான சேவைகள் ரத்து காரணமாகவும், இந்தியாவிற்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு 'வந்தே பாரத்'  திட்டத்தை துவங்கியது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்,  அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் தாய்நாடு செல்ல விரும்புபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களில் கர்ப்பிணிகள், முதியவர்கள், வேலை இழந்தவர்கள் உள்ளிட்டோர்,  முன்னுரிமை அடிப்படையில் அழைத்து வரப்படுகின்றனர்.

 

 


இதனடிப்படையில்  ‘வந்தே பாரத்‘ திட்டம் தொடங்கப்பட்டு, யு.ஏ.இ., கத்தார், ஓமன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தும் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் விமான நிலையங்களின் பட்டியலில் தமிழக விமான நிலையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்திய தூதரகங்கள் மற்றும் தமிழக அரசின் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழகத்திற்கு விமான சேவை இல்லாததன் காரணமாக தவித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை  வந்தே பாரத்  திட்டத்தில்  தமிழகம் அழைத்து வர, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், அங்கு உணவு, மருத்துவம் இல்லாமல் தவித்துவரும் தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, வழக்கு விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.