Skip to main content

அதிவேகமாக சென்ற கார் ஐந்து வாகனங்களின் மீது மோதி விபத்து!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

chennai egmore car incident police investigation

 

விபத்தில் சிக்கிய காருக்குள் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய யானைத் தந்தங்களை, அவர்கள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 

 

சென்னை எழும்பூரில் காசா மேஜர் சாலையில் நடந்த விபத்தின் சி.சி.டி.வி. பதிவான காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று, எதிரில் வந்த மற்றொரு கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் உள்பட ஐந்து வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 

விசாரணையில் விபத்தை ஏற்படுத்தி கார் ஓட்டுநர், எஸ்.வி.ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மதுபோதையில் கார் ஓட்டி வந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

இந்தியத் தண்டனைச் சட்டம் 308, மரணம் விளைவிக்கும் குற்றத்தைச் செய்ய முயற்சித்தல், மோட்டார் வாகன சட்டப்பிரிவான 189 குடிபோதையில் வாகனத்தை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர், எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். 

 

வழக்கறிஞர் சி.வி.ராதாகிருஷ்ணன் அதிவேகமாகச் சென்று மோதிய காரை போக்குவரத்து காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது, காருக்குள் இருந்த பை ஒன்றில் யானைத் தந்தங்களும், மான் கொம்புகளும் இருந்துள்ளது. இதனைச் சற்றும் எதிர் பாராத போக்குவரத்து காவலர்கள், எழும்பூர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அனைத்தையும் கைப்பற்றி, அந்த காரை ஓட்டி வந்தவர் மீது விசாரணை நடத்தினர். 

 

அதில் அவர் பெயர் வில்சன் என்பதும், எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. விபத்தில் படுகாயமடைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வில்சனிடம், யானைத் தந்தங்கள் குறித்த விசாரணையைத் தொடங்கினர். 

 

ஆப்பிரிக்காவில் சுற்றுலாத்துறையில் முக்கிய பதவியில் இருக்கும் உறவினர் தனக்குக் கொடுத்ததாகவும், அமெரிக்காவில் அந்த தந்தங்கள், மான் கொம்புகள் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை அவரே வாங்கி தந்ததாகவும் வில்சன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். 

 

ஆனாலும், வில்சன் கொடுத்த தகவல்களை முழுவதுமாக நம்பிவிடாமல், வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து யானைத் தந்தங்கள் உள்ளிட்டவற்றை ஒப்படைத்தனர். அதையடுத்து வனத்துறையினர், வண்டலூரில் உள்ள ஆய்வகத்திற்கு யானைத் தந்தங்களை அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.