Chance of very heavy rain in 7 districts Meteorological Department warns

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படிகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (20.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை (21.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று தென்காசி, தேனி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் (22.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.