Skip to main content

குழந்தை பள்ளியிலிருந்து அழைத்து வந்தபோது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!  

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Chain Snatching in trichy

 

மணப்பாறையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருடர்களின் இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்து செயினை மீட்ட ஆட்டோ டிரைவர் செல்லையாவிற்கு பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது. இதில் பெண், மற்றும் செயின் திருடன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடிய மற்றொரு திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலை தெற்கு லெட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் இரயில்வே ஊழியர் வினோஷ். இவரது மனைவி கோமளாதேவி. இவர் 4 வயது மகனை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சாலையோரம் நடந்து சென்ற கோமளாதேவியின் பின்னே இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், கோமளாதேவி கழுத்திலிருந்த 5 சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பித்துள்ளனர். 

 

கோமளாதேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதேநேரம் பள்ளி சவாரிக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் செல்லையா, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவாறு வந்துள்ளார். சற்றும் தாமதிக்காமல் ஆட்டோவை இருசக்கர வாகனத்திற்கு நெருக்கடி கொடுத்து சாலையில் நிறுத்த, இதை சற்றும் எதிர்பார்க்காத திருடர்கள் இருசக்கர வாகனத்தை ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர். இதில் திருடன் ஒருவன் தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த மற்றொரு திருடனை ஓடிவந்த பொதுமக்கள் பிடித்து செயினை மீட்டனர். பின் கை – கால்களை கட்டிவைத்தனர், தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

 

போலீஸார் விசாரணையில் பொதுமக்களிடம் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி நாகப்பட்டினம் மாவட்டம், காடம்பாடியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியினை சேர்ந்த விஜய் என்பதும், தப்பியோடிய நபர் திருச்சி எட்டரை கோப்பு பகுதியினை சேர்ந்த நவீன் என்பதும், அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து காயமடைந்த விஜய் போலீஸ்  மேற்பார்வையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செயின் பறிப்பில் காயமடைந்த கோமளாதேவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து. டி.எஸ்.பி. ராமநாதன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள். தப்பியோடிய மற்றொரு திருடனை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.