Skip to main content

பேச்சு கொடுத்துகொண்டே மூதாட்டியிடம் செயினை மாற்றி ஏமாற்றிய மர்ம நபர்...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

chain robber from old lady

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மனைவி பர்வதவர்த்தினி, 62 வயதான இவர் நேற்று நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஒரு மர்ம நபர் மார்க்கெட் பகுதியில் இருந்து பர்வதவர்த்தினி வந்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். கிடங்கில் ஏரிக்கரை ஓரம் பர்வதவர்த்தினி தனியாக சென்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த மர்ம நபர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் பர்வதவர்த்தினியிடம் நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் எத்தனை சவரன் என கேட்டுள்ளார். 

 

அதற்கு பர்வதவர்த்தினி 4 சவரன் என தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் தான், வைத்திருந்த அதே போன்று ஒரு செயினை எடுத்து காட்டி இந்த செயினும் உங்களுடைய செயினும் எவ்வளவு எடை இருக்கிறது என பார்க்க வேண்டும் உங்களுடைய செயினை கழட்டி தாருங்கள் என கேட்டுள்ளார். உடனே பர்வதவர்தினி எந்த யோசனையும் இல்லாமல் அப்பாவித்தனமாக தன் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்துள்ளார். 

 

அப்போது அந்த மர்ம நபர் தான், வைத்திருந்த கவரிங் செயினையும் பர்வதவர்த்தினி கொடுத்த தங்க செயினையும் இரு கைகளிலும் வைத்து இரண்டும் ஒரே அளவு எடையேதான் இருக்கும்போல் தெரிகிறது  என்று கூறியபடியே கண்ணிமைக்கும் நேரத்தில்தான் வைத்திருந்த கவரிங் செயினை பர்வதவர்த்தினியிடம் கொடுத்துவிட்டு பரிவர்த்தினி கொடுத்த தங்க செயின் உடன் பைக்கில் பறந்துவிட்டார். 

 

சந்தேகமடைந்த பர்வதவர்த்தினி பைக்கில் வந்த மர்ம நபர்கள் அளித்த செயினை கொண்டு சென்று நகை கடைக்காரரிடம் காட்டியுள்ளார். அது கவரிங் நகை என்று கூறியுள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திகைத்து போய் உள்ளார் பர்வதவர்த்தினி. உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழ்மணி, தனிப்பிரிவு காவலர் ஆதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் செயின் பறித்து சென்ற மர்ம நபரின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளை;போலீசார் விசாரணை

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
Robbery in three shops in succession; police investigation

ஈரோட்டில் மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் அந்த பகுதியில் துரித உணவு கடை வைத்திருந்தார். நேற்று இரவு 12 மணியளவில் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் சாவியை திறந்து அதில் இருந்த ரூ.3000 பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது.

அதனருகே உள்ள மற்றொரு குளிர்பான கடையின் பூட்டை  உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பணம் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர். குளிர்பானம் கடை அருகே ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 26 ஆயிரம் ரொக்க பணம் திருட்டுப் போய் இருந்தது.

இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.