Skip to main content

சிபிஐ சோதனையும் பட்டாசு உற்பத்தியாளர்கள் புலம்பலும்...

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

“பட்டாசுத் தொழிலுக்கு இது சோதனைக்காலம்..” என்றே சொல்லி வருகின்றனர், பட்டாசு உற்பத்தியாளர்கள். அவர்கள் கூறுவது போலவே, சிவகாசியிலுள்ள பட்டாசு ஆலைகளில் 15 பேர் கொண்ட சிபிஐ ஆய்வுக்குழுவினர், இன்று (12/03/2020) சோதனை நடத்தினர். 


உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்குத் தடைகோரிய வழக்கில், தடையில்லை என்று தீர்ப்பு வந்தாலும், பட்டாசு உற்பத்தி செய்வதில் சில நிபந்தனைகளை விதித்திருந்தது உச்ச நீதிமன்றம். குறைவாக மாசுபடுத்தும் மேம்பட்ட நவீன வகை பட்டாசுகளை, அதாவது பசுமைப் பட்டாசுகளை மட்டுமே இனிமேல் உற்பத்தி செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. 

cbi team inspection with sivakasi plants

அதனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்குத் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்று பட்டாசு ஆலைகள் செயல்பட்டாலும், சில உற்பத்தியாளர்கள் ‘நீங்க என்ன சொல்லுறது? நாங்க என்ன கேட்கிறது? பேரியம் நைட்ரேட் வேதிப்பொருள் இல்லாமல் தயாரிப்பதெல்லாம் பட்டாசு ஆகுமா?’ என்ற குமுறலில், வழக்கம் போலவே பட்டாசு உற்பத்தி செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனால், சிவகாசி பட்டாசு ஆலைகளில் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனரா? என ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிபிஐ- க்கு உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். 
 

அதன்படி, சிபிஐ குழுவினர் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டு, பட்டாசுகளையும், வேதிப்பொருள் கலவைகளையும் சீல் வைத்த அட்டைப் பெட்டிகளில் பேக் செய்து எடுத்துச் சென்றனர். “பா.ஜ.க. ஆட்சியில் எல்லா தொழில்களையும் போல பட்டாசுத் தொழிலும் நலிந்து வருவதற்குக் காரணம், அந்த மத்திய அமைச்சர்தான்..” என்று ஒரு பெண் அமைச்சரைக் கைகாட்டுகிறார்கள், பாதிக்கப்பட்ட சில பட்டாசு உற்பத்தியாளர்கள். “அந்த அமைச்சர் ‘அதிக அளவில் பட்டாசு உற்பத்தி செய்துவிட்டு குறைந்த அளவே கணக்கு காட்டிவருவது எனக்கு நன்றாகவே தெரியும். பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் இந்தியா முழுவதும் அடித்துவரும் கொள்ளை லாபம் எத்தனை ஆயிரம் கோடி என்ற கணக்கும் என் பார்வைக்கு வந்தது. 


அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து பல்லாயிரம் கோடிகளை கருப்பு பணமாக வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்கு ஏன் பா.ஜ.க. அரசு உதவ வேண்டும்? சீனாவிலிருந்து பட்டாசு இறக்குமதி செய்தால் அரசுக்கு வருவாய் அதிகம் கிடைக்குமே?‘ என்றெல்லாம் மிரட்டலாகப் பேசியிருக்கிறார். ஒருகட்டத்தில், மத்திய அமைச்சகத்தின் தூண்டுதலிலேயே, பட்டாசை தடை செய்யவேண்டுமென்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதுதான், பசுமைப் பட்டாசு வரைக்கும் கொண்டுவந்து எங்களை வதை செய்கிறது.” என்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.