Case registered against former minister Saroja!

ஓய்வுபெற்ற கூட்டுறவு ஊழியர் குணசீலன் (64) என்பவர் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் தனது உறவினருமான சரோஜா மீது ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அவர் அளித்திருந்த புகாரில், "தமிழக கூட்டுறவுத்துறையில் பணியாற்றிவந்த நான், ஓய்வுபெற்ற பிறகு தற்போது பத்திர எழுத்தராக பணியாற்றிவருகிறேன். மருத்துவர் சரோஜா அமைச்சராக இருந்தபோது, எங்களை அழைத்து சத்துணவுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும், பணம் கொடுப்பவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் கூறினார்.

Advertisment

இதை நம்பி நானும், எனது மனைவியும் எங்களுக்குத் தெரிந்த 15 பேரிடம் 76.50 லட்சம் ரூபாய் வசூலித்தோம். முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் என்னுடைய வீட்டில் வைத்துக் கொடுத்தோம். அப்போது அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சனும் உடன் இருந்தார். அந்தப் பணத்தை வைத்துத்தான் தற்போது ராசிபுரத்தில் அவர்கள் வசித்துவரும் வீட்டை கிரயம் செய்தனர்.

இதையடுத்து, இரண்டாம் தவணையாக 26.50 லட்சம் ரூபாயை சரோஜா முன்னிலையில் அவருடைய கணவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் உறுதியளித்தபடி நாங்கள் பரிந்துரை செய்த யாருக்கும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள், எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருகின்றனர். பணத்தைக் கேட்டு தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்கின்றனர். எங்கள் நிலையை அவர்களிடம் கூறினாலும், பணத்தை உங்களிடம்தான் கொடுத்தோம், அதனால் நீங்கள்தான் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றனர். இந்த நெருக்கடியால் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என குணசீலன் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் மனுவைப் பெற்ற ராசிபுரம் காவல்துறையினர், அதனை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்தனர். இதுதொடர்பாக குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், நேற்று (27.10.2021) பண மோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது (406) நம்பிக்கை மோசடி, (420) ஏமாற்றுதல் மற்றும் (506) (i) குற்றவியல் மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.