தமிழக அரசு அலுவலகங்களில் மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என 1978ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘1990ஆம் ஆண்டு அம்பேத்கர் படமும், 2006ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி., காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர், தமிழன்னை புகைப்படங்கள் வைக்க அனுமதித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என புகார் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாணை பிறப்பித்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாகவும், தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் தெரிவித்தார். மேலும், மனு குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.
இதை ஏற்று, வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் வைக்க வகை செய்துள்ள அரசாணையின்படி எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.