
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பாக சித்திரை வெண்குடை திருவிழாவை குறிப்பிட்ட சமுதாயத்தினர் 14 ஆம் தேதி நடத்தவிருக்கின்றனர். அதன் காரணமாக, வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, அதே சமுதாயத்தைச் சேர்ந்த அம்மன்பொட்டல் தெருவாசிகள், எங்களை ஏன் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைக்கவில்லை எனக் கேட்டு கோஷமிட்டனர்.
மேலும், 11 ஆம் தேதி இரவு 9-15 மணி முதல் 9-25 மணி வரை அந்த வழியாகச் சென்ற வாகனங்களை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். ராஜபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனும் அவருடைய உதவியாளர்களும் கலைந்து போகச் சொல்லி எச்சரித்தும் அந்தத் தெருவாசிகள் கேட்கவில்லை.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், அம்மன்பொட்டல் தெரு செயலாளர் செல்வராஜ் தலைமையில், மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் மீது ராஜபாளையம் வடக்கு காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.