![Car accident near thiruvannamalai seven passes away](http://image.nakkheeran.in/cdn/farfuture/poJBw_x32IZX2pXXyGFeEb15fCT5wFjKuzCT0QOIQQI/1697343853/sites/default/files/inline-images/th_4834.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச் சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அந்தனூர் புறவழிச் சாலையில், ஒரு கார் பெங்களுரூவை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதேசமயம், எதிர்புறத்தில் திருவண்ணாமலையை நோக்கி ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு காவல்துறையினருடன் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால், அந்த காரில் பயணித்த ஆறு பேர் பரிதாபமாக பலியானர்.
அந்த காரில், இரு சிறுவர்கள், நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்ததாகவும், இவர்கள் அந்தப் பெண்ணைத் தவிர மற்ற அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அந்தப் பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. விபத்தில் பலியான ஆறு பேரின் உடலையும் மீட்ட போலீஸார், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்டிருப்பதால் அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.