Skip to main content

தாலி கட்டும் நேரத்தில் மயமான மணப்பெண்; திடீர் மணப்பெண்ணுடன் நடந்த திருமணம்

Published on 18/09/2023 | Edited on 20/09/2023

 

bn

 

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் வெளியேறியதால் உறவினர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புத்தாண்டு குப்பம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இருதரப்பு உறவினர்களும் பெற்றோர்களும் சேர்ந்து பேசி முடித்து நிச்சயம் திருமணம் செய்யப்பட்டது. அதன்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று காலை நடைபெற இருந்தது. இருவீட்டு பெற்றோர்களும் திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர், நண்பர்களுக்கு வழங்கி அவர்கள் அனைவரும் மண்டபத்திற்கு முதல் நாளே வந்துவிட்டனர்.

 

திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முதல்நாள் இரவு திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மேடை ஏறிய மணமக்களை உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்தனர். மணமகள் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபத்திலே தங்கி இருந்தனர். காலையில் தாலி கட்டும் நேரம் நெருங்கியதை அடுத்து பெற்றோர்களும் உறவினர்களும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இதற்காக அதிகாலை 4 மணி அளவில் மணமேடைக்கு மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வருவதற்காக அவரது அறைக்கு சென்றனர்.  அங்கே மணப்பெண்ணை காணவில்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

பல இடங்களில் மணப்பெண்ணை தேடி அலைந்தனர். மணப்பெண் கிடைக்கவில்லை. மணமகளுக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும் அதனால் மணமகள் மண்டபத்தில் இருந்து காணாமல் போனதாக தெரிய வந்தது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் எங்கே போனார் என்று மணமகன் வீட்டார் கேட்க, இரு வீட்டு உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அங்கிருந்த இருதரப்பு முக்கியஸ்தர்களும் அவர்களை அமைதிப்படுத்தினர். அடுத்து அங்கு திருமணத்துக்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் பெண்ணை பேசி முடித்து அதே மண்டபத்தில் மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். உடனடியாக அந்த பெண் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் சம்மதத்துடன் அந்த திடீர் மண பெண்ணுக்கும் மாப்பிள்ளை எதிர்பாராத திருமணம் நடந்தது. அதன் பின்னர் திருமண மண்டபத்தில் அமைதி திரும்பியது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் விருந்து சாப்பிட்டு மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றனர். தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மாயமான சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்