Skip to main content

பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கி பேயோட்டிய 'பிராந்தி சாமியார்' கைது!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 

நாமக்கல் அருகே, பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாட்டையாலும் பிரம்பாலும் கொடூரமாகத் தாக்கி பேயோட்டிய பிராந்தி சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காதப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). கடந்த சில ஆண்டுகளாக, மஞ்சநாய்க்கணூரில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி வந்தார்.

 

உடல்நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மகன், மகள் திருமணத்தடை அகல வேண்டுவோர் என அவரிடம் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டு வந்தனர். குறிப்பாக, பேய் பிடித்ததாகக் கருதப்படும் பெண்களுக்குப் பேய் ஓட்டும் பணிகளையும் செய்து வந்தார். 

 

தனக்குள் கருப்பண்ண சாமி இறங்கியிருப்பதாகவும், தான் ஒரு சிவ பக்தன் என்றும் சொல்லிவந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, முகத்திலும் உடலிலும் திருநீறு, திரிசடை, இடுப்பில் கொத்தாக கட்டப்பட்ட சலங்கைகள், கருப்பு நிறத்தில் அரைக்கால் டிரவுசர் என சாமியார் போல இருந்ததாலும், அவர் கூறிய சில அருள்வாக்குகள் பலித்ததாலும் படித்தவர்கள் கூட அவரிடம் அருள்வாக்கு கேட்டு வந்தனர். 

 

பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களின் உடலில் இருந்து பேயை விரட்டி அடிக்கிறேன் பேர்வழி என்று, எதிரில் வந்து அமரும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முதுகில் கையால் குத்துவதும், சாட்டையால் சரமாரியாக அடிப்பதும், கன்னத்தில் பளீச் பளீச் என அடிப்பதும், குனிய வைத்து காலால் உதைப்பது என கொடூரமான முறைகளைக் கையாண்டு வந்தார். சாட்டை மட்டுமின்றி நீளமான மூங்கில் பிரம்பாலும் பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களைத் தாக்கி வந்துள்ளார். 

 

'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 

தன் களைப்பு தீர, அடிக்கடி பிராந்தி குடித்துக்கொள்கிறார். பிராந்தியை ஒரு டம்ளரில் ஊற்றிக்கொடுப்பதற்காகவே உதவியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். 

 

அவர் பேய் ஓட்டும் காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வேகமாகப் பகிரப்பட்டுவந்தது. அவர் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும், மூடநம்பிக்கை என்றும் விவாதங்களும் கண்டனங்களும் எழுந்தன. 

 

இதையடுத்து, பொம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் சாமியார் மீது புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன், பேயோட்டி அனில்குமாரை வியாழக்கிழமை (மே 6) நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். அப்போது நடந்த விசாரணையில், தற்போது வாட்ஸ்ஆப்களில் பகிரப்பட்டு வரும் பேயோட்டும் சம்பவம், மூன்று மாதத்திற்கு முன்பு நடந்தது என்று அனில்குமார் கூறியுள்ளார். 

 

எனினும், அருள்வாக்கு, பேயோட்டுதல் என்ற பெயரில் பெண்களைக் கொடூரமாக தாக்குவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் பேயோட்டி அனில்குமாரை வெள்ளிக்கிழமை (மே 7) கைது செய்தனர். 

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''சாமியார் அனில்குமார் பேயோட்டியதாக வாட்ஸ்ஆப்களில் வரும் சம்பவத்தில் தொடர்புடைய பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தற்போது, பெண்களைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில்தான் அனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.