Skip to main content

பொன்னீலன்,அறிவுமதிக்கு கலைஞர் விருது... பபாசி அறிவிப்பு...

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மூத்த தலைவரும், தேசிய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க தலைவருமான நாவலாசிரியர் எழுத்தாளர் பொன்னீலனுக்கு பபாசி அமைப்பு கலைஞர் விருது கொடுக்கிறது.

2020 -ஆம் ஆண்டிற்கான டாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை பபாசி அறிவித்துள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) கடந்த 43 ஆண்டுகளாக சென்னை புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சிகளுக்குள் ஒன்றாக சென்னை புத்தகக் காட்சியை மாற்றியது பபாசி அமைப்பு . இந்நிலையில் சென்ற 2007ம்  ஆண்டு  ஜனவரி 10ம் தேதி அன்று  சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள தூய ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற  30-வது சென்னை புத்தகக் காட்சியை மறைந்த அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். மேலும் அந்நிகழ்வில், கலைஞரின் சொந்தப்  பணமான ரூபாய் ஒரு கோடியை பபாசி அமைப்பிடம் வழங்கி, அறக்கட்டளை ஒன்றை அமைத்து இந்த  ஒரு கோடி ரூபாயை மூலதனமாக இருப்பு வைத்து, இந்த தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி வருவாயின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி மற்றும் விருது வழங்கி அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

papasi announce award


தி.மு.க. தலைவர் கலைஞரின் விருப்பப்படி கடந்த 2008ம்  ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த  எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கலைஞர் பொற்கிழி மற்றும் விருது பபாசி  மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2008ம்  ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரையிலும் மொத்தம் 82 எழுத்தாளர்களுக்கு ரூ. 82 லட்சம் பொற்கிழிகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள சிறந்த அறிஞர்கள் அடங்கிய தேர்வுக்குழுவின் மூலம்  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி கடந்த மார்ச் 10, 2020 அன்று ஒன்று கூடிய  தேர்வுக்குழுவினர் கீழ்க்கண்ட எழுத்தாளர்களை இந்த ஆண்டுக்கான விருதிற்கு தேர்வு செய்தனர்.
 

2020ம் ஆண்டிற்கான கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரத்தை பபாசி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி,

 

papasi announce award


1) ந.முருகேச பாண்டியன்
உரைநடை

papasi announce award


2) அ.மங்கை
நாடகம்

papasi announce award


3)அறிவுமதி
கவிதை

பொன்னீலன்


4) பொன்னீலன்
நாவல்

சித்தலிங்கையா


5) சித்தலிங்கையா
பிற இந்திய மொழி எழுத்தாளர் - கன்னடம்

 

book


6) ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப..
ஆங்கிலம்

இவர்களுக்கு இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23, 2020 அன்று சென்னையில் நடைபெறுகிறது. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் என பல்துறை  அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு  பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

எழுத்தாளர் பாமாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Chief minister MK Stalin Greetings to writer Bama 

பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாகத் தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு நேற்று (07.03.2024) அறிவித்திருந்தது.

எழுத்தாளர் பாமா, பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைத் தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட் புக்' விருதைப் பெற்றுள்ளது.

Chief minister MK Stalin Greetings to writer Bama

இந்நிலையில் எழுத்தாளர் பாமாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.