Skip to main content

23 நாட்களுக்கு பிறகு மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கைதியின் உடல்...

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

The body of the prisoner was re-examined and buried 23 days later

 

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வம் (எ) செல்வமுருகன்(40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும்,  மதன்(26) என்ற மகனும், 12 வயது மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்துவந்த இவர்கள், தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தனர். 

 

இந்நிலையில் கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26-ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினை பறித்ததாக செல்வமுருகன் மீது நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு 30.10.2020 அன்று விருத்தாசலம் கிளைச்சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 02.11.2020 அன்று செல்வமுருகனுக்கு வலிப்பு நோய்  ஏற்பட்டதாகக் கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்பு மீண்டும் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் 04.11.2020 அன்று இரவு வலிப்பு ஏற்பட்டதாகக்கூறி செல்வமுருகன் அரசு மருத்துவமனைக்கு மீண்டும்  கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர்  குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில், குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன் செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம்  பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது. 

 

அதேசமயம் செல்வமுருகன் மனைவி பிரேமா, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி,  காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம், 'தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் உயிரிழந்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் புகார் மனு அளித்தார். அத்துடன் உறவினர்களுடன் 06.11.2020 அன்று சென்னை - கும்பகோணம் சாலையில் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

இதனிடையே 'காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகவும், அவரது இறப்பிற்கு நீதி மற்றும் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்' என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

 

அதேசமயம்  விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், தொடர்ந்து விசாரணை செய்து வந்தார். அதேபோல் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்து வருகிறது. மேலும் செல்வமுருகன் மனைவி பிரேமா கோரிக்கை வைத்ததன் பேரில் டி.ஐ.ஜி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு சி.பி.சி.ஐ.டி  துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) குணவர்மன் தலைமையிலான போலீசாரரும் விசாரணை செய்து வருகின்றனர். 

 

இதனிடையே சிறைக்கைதி மரணத்தில் கைதியின் குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்ட நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தொய்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கூறி கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.  

 

அதேசமயம் தனது கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் கூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா, சடலத்தை வாங்காமல் இருந்து வந்தார். மேலும் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி பிரேமா தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'விருத்தாசலம் குற்றவியல் நீதிபதி இதுகுறித்து முடிவெடுக்கலாம்'  என்று கூறி கடந்த 18-ஆம் தேதி வழக்கினை முடித்து வைத்தது.

 

அதையடுத்து பிரேமா, 'மறு உடற்கூறு ஆய்விற்கு உத்தரவு வழங்கக்கோரியும், மறு உடற்கூறாய்வினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும்,  ஆய்வின்போது மருத்துவ பேராசிரியர் ஒருவர், 2 மருத்துவர்கள், தான் மற்றும் தனது வழக்கறிஞர் என 5 நபர்கள் இருக்க உத்தரவு வழங்க கோரியும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், 'ஜிப்மர் மருத்துவமனையில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்வதற்கான வாய்மொழி உத்தரவு அளித்தார். 

 

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் செல்வமமுருகனின் சடலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

 

அதையடுத்து நேற்று மதியம் செல்வமுருகன் சடலம் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்னிலையில்,  ஜிப்மர்  மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவ பரிசோதனையில் பிரேமா மற்றும் அவரது வழக்கறிஞர், உறவினர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். உடற்கூறு ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு எடுக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணயளவில் செல்வமுருகனின் சடலம், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சடலம் அவரது சொந்த ஊரான காடாம்புலியூர் கொண்டுவரப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

செல்வமுருகன் இறந்து 23 நாட்கள் கழித்து அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.