Skip to main content

“விவசாயிகளிடம் மோதலை உருவாக்கி லாபம் பார்க்கப் பார்க்கிறது பா.ஜ.க!” - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

"BJP is trying to make a profit by creating conflict with the farmers!" DMK Periyasamy


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும் போது, “எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் செய்துவருகிறேன். அதுபோல் எனது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றிவருகிறேன். இது தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். தொகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் பல்வேறு திட்டங்களை தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தி இருக்கிறேன்.

 

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ஆளும் அ.தி.மு.க அரசு தவிர்த்து வருகிறது. இருந்தபோதும் சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் வளர்ச்சி பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். மேலும், பிரதான குடகனாறு நீர் பங்கீடு பிரச்சனையில், முத்தரப்பு விவசாயிகளின் நலனுக்காகவும் பொது மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்காகவும் முழுவீச்சில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

அந்தக் காலத்தில் கன்னிமார் கோயில் அருகே நரசிங்கபுரம் தெற்குப் பகுதிக்கும் ஆத்தூர் ராஜா வாய்க்காலுக்கும் கொடகனாற்றுக்கும் தண்ணீர் செல்வதற்காகக் கற்களை வைத்து அணை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள் முன்னோர்கள். இந்த நிலையில் சமீபகாலமாக நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு ஆகிய மூன்று தரப்பு விவசாயிகளுக்கு  இடையே தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிக்கல் இருந்து வருகிறது. அதுவும் கற்களாலான அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிமெண்ட் போட்டு அடைத்ததால் ஏற்பட்ட சிக்கல். அந்தச் சிக்கலை தீர்த்து மூன்று தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒரு தீர்வை ஏற்படுத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். 


அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அவர்களுக்குள் சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவித்தார்கள். அதனை மூன்று தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து இனிவரும் காலங்களில் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, விவசாயிகளும் அதனை வழிமொழிந்தனர்.

 

Ad

 

அதன் தொடர்ச்சியாக ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது அரசு, அந்தக் குழு தண்ணீர் பகிர்வதில் பிரச்சனைக்குரிய இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தது. மூன்று தரப்பு விவசாயிகளிடமும் கருத்துக் கேட்டு, தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாக வல்லுநர் குழு கூறியுள்ள தீர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 
 

இந்த நடவடிக்கையை பருவமழை தொடங்குவதற்கு முன் செயல்படுத்த வேண்டும். தண்ணீர் பகிர்வதில் உண்மை நிலை இதுதான். அப்படி இருக்க முதலில் நரசிங்கபுரம் ராஜ வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்லும்போது, அந்தப் பகுதியில் என்னுடைய விவசாய நிலத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்வதாகவும் மற்றும் எனது தொழிற்சாலைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதாகவும் ஒரு புரளியைக் கிளப்பினார்கள். இது முற்றிலும் பொய்யான தகவல்.

 

நரசிங்கபுரம் ராஜ வாய்க்கால் தண்ணீர் செங்கட்டான் குளத்துடன் முடிவடைகிறது. மிதமிஞ்சிய நீர் வரத்துக் காலத்தில் மட்டுமே குடிநீர்த் தேவைக்காக நிலக்கோட்டை பகுதிகளுக்குச் செல்வது அனைத்து விவசாயத் தரப்பினரும் அறிந்த உண்மை. அதைத் தாண்டி வத்தலகுண்டு போவதற்கு வாய்க்கால் இல்லை என்ற எதார்த்த உண்மையை மறைத்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு குடகனாற்றில் தண்ணீர் வரும்போது அனுமந்த ராயன் கோட்டை பகுதியில், எனக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதற்காக தண்ணீரைக் கொண்டு செல்வதாகவும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். 

 

Nakkheeran


பிரச்சனைக்குரிய தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் நரசிங்கபுரம் தெற்கு வாய்க்கால் பகுதியிலோ அல்லது அனுமந்தரான் கோட்டை பகுதியிலோ எனக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்பதுதான் உண்மை. அந்தப் பகுதிகளில் பிரச்சனைக்குரிய தண்ணீரை நான் எனது நிலத்திற்காகப் பயன்படுத்தியதை யாராவது ஒருவர் நிருபித்தாலும் அரசியலை விட்டு விலகிக்கொள்ளத் தயார். இதனை நான் சவாலாகவே சொல்கிறேன். மக்கள் பிரச்சனையில் தொடர்ந்து பங்காற்றி வரும் என்னை, மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் என்னை, போட்டியாக நினைப்பவர்கள் அவர்களும் மக்கள் பணியில் கவனம் செலுத்தட்டும். அதனைவிடுத்து சமூக வலை தளங்களில் பொய்ப் புகார்களை பரப்புவதால் நான் அஞ்சமாட்டேன். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொகுதிக்காக நான் எடுக்கும் முயற்சிகளை மக்கள் நன்கு அறிவார்கள்.

 

என் மீது குற்றம் சுமத்துவர்கள் ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால், அதனை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன். அவதூறுகளையும் பொய்ப் பிரச்சாரத்தையும் முன்னிறுத்தி, விவசாயிகள் மற்றும் பொது மக்களை திசைதிருப்பி, அதன் மூலம் ஆதாயம் தேடலாம் என்று நினைப்பவர்களின் நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது என்பதை இதன்மூலம்  தெரிவிப்பதோடு, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இதில் பி.ஜே.பி அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அந்தக் கட்சி, இதுவரை எள் முனைகூட மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது. மதத்தை வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது விவசாயிகளிடம் மோதலை உருவாக்கி லாபம் பார்க்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.