விருதுநகர் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சனையை கையிலெடுத்துள்ளது தமிழக பா.ஜ.க. இது குறித்து பிரச்சனையின் காரணங்களைக் கண்டறிந்து அது பற்றி விரிவான ரிப்போர்ட் ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறார் தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவர் காய்த்ரி ரகுராம். இது பற்றி அவரிடம் நாம் பேசியபோது, "விருதுநகர் மாவட்டத்தில் 15 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாராமாகவும், 45,000 ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகவும் இருந்த சென்பகவல்லி மதகு 1978- ல் சிதிலமடைந்தது. மேற்கு தொடர்ச்சி மாலைப் பகுதியில் உள்ள இந்த மதகு கேரளாவின் எல்லையில் இருக்கிறது. அதனால், அதனை நிர்வகிக்கும் பொறுப்பு கேரள அரசாங்கத்திடம் இருக்கிறது. சிதிலமடைந்த நாளிலிருந்தே கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. மதகு சரி செய்யப்படாததால், விருநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து நின்று போனது.
இதனால் குடிநீரும், விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதைச் சரி செய்யுமாறு, தனது ஆட்சிக் காலத்தில் (1978) 5 லட்ச ரூபாயை கேரள அரசுக்கு எம்.ஜி.ஆர். தந்தார். ஆனால், சரி செய்யவில்லை. மாறாக, 1996-ல் அந்த தொகையை தமிழக அரசிடமே திருப்பித் தந்துவிட்டது கேரள அரசு. தமிழக அரசே அதனை சரி செய்ய நினைத்தாலும் அனுமதி தரவில்லை கேரளா. தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தால், தமிழக காங்கிரசும், தமிழக கம்யூனிஸ்டுகளும், உடைந்த மதகுகளைச் சரி செய்ய கேரள அரசிடம் அனுமதிப் பெற்று தர வேண்டும்.செய்வார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுராம்.