Skip to main content

அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

hjk

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 13 ந் தேதி ஒரு உணவு விடுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற கும்பல் உணவு சாப்பிட்ட போது பில் கூடுதலாக போட்டதாக ஏற்பட்ட தகராறில் உணவு விடுதி தரப்பிற்கும் கேரளா சுற்றுலா தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கேரளா சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் முத்துப்பேட்டை போலிசார்.

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் அதிகாலையில் பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பாவான அதிமுக நகர இளைஞரணி துணைச் செயலாளர் சந்திரபோஸ் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சத்தம் கேட்டு உடனே தீயை அணைத்ததால் பெரிய சேதங்கள் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும் போது... " பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனே கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"  என்று கூறினார். 

 

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ நாளில் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த குமரைய்யா மகன் பாஜக பிரமுகர் வசந்த் (எ) வசந்த குமார் உள்பட 7 பேர் சேர்ந்த கும்பல் தான் அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கண்டறியப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசும் முன்பு சித்தமல்லியில் மதுவிருந்து நடந்திருப்பதும் அதில் உணவு விடுதி உரிமையாளர் சகோதரர் மற்றும் பெட்ரோல் குண்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் உடன் ஏற்கனவே பிரச்சனையில் ஈடுபட்டிருந்த நபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

 

சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு பாஜக பிரமுகர் வசந்த (எ) வசந்த குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசந்த் ஏற்கனவே திமுக பிரமுகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த வழக்கிலும் சம்மந்தப்பட்டவர் என்றும் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு ஆதரவாக பெட்ரோல் குண்டு வீசி இருப்பார்கள் என்று திசை திருப்ப முயன்று கடைசியில் பாஜக பிரமுகர் வசந்த் சிக்கிக் கொண்டதால் பாஜக விலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது போல தொடர் சம்பவத்தில் ஈடுபடும் வசந்த் மீது குண்டர் தடுப்பு காவல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.