Skip to main content

அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

hjk

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 13 ந் தேதி ஒரு உணவு விடுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற கும்பல் உணவு சாப்பிட்ட போது பில் கூடுதலாக போட்டதாக ஏற்பட்ட தகராறில் உணவு விடுதி தரப்பிற்கும் கேரளா சுற்றுலா தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கேரளா சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர் முத்துப்பேட்டை போலிசார்.

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் அதிகாலையில் பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பாவான அதிமுக நகர இளைஞரணி துணைச் செயலாளர் சந்திரபோஸ் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சத்தம் கேட்டு உடனே தீயை அணைத்ததால் பெரிய சேதங்கள் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும் போது... " பாஜக பிரமுகர் ராமுவின் சித்தப்பா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை உடனே கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்"  என்று கூறினார். 

 

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ நாளில் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த குமரைய்யா மகன் பாஜக பிரமுகர் வசந்த் (எ) வசந்த குமார் உள்பட 7 பேர் சேர்ந்த கும்பல் தான் அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது கண்டறியப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசும் முன்பு சித்தமல்லியில் மதுவிருந்து நடந்திருப்பதும் அதில் உணவு விடுதி உரிமையாளர் சகோதரர் மற்றும் பெட்ரோல் குண்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் சந்திரபோஸ் உடன் ஏற்கனவே பிரச்சனையில் ஈடுபட்டிருந்த நபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

 

சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு பாஜக பிரமுகர் வசந்த (எ) வசந்த குமார் கைது செய்யப்பட்டார். மற்ற 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வசந்த் ஏற்கனவே திமுக பிரமுகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த வழக்கிலும் சம்மந்தப்பட்டவர் என்றும் பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தத்தின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து சுற்றுலா வந்தவர்களுக்கு ஆதரவாக பெட்ரோல் குண்டு வீசி இருப்பார்கள் என்று திசை திருப்ப முயன்று கடைசியில் பாஜக பிரமுகர் வசந்த் சிக்கிக் கொண்டதால் பாஜக விலேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது போல தொடர் சம்பவத்தில் ஈடுபடும் வசந்த் மீது குண்டர் தடுப்பு காவல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் புகார் கொடுத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.