Skip to main content

தமிழகத்தில் அடுத்து வரும் ஆட்சியை பாஜகதான் தீர்மானிக்கும்..! - எல்.முருகன் பேச்சு!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020

 

BJP L MURUGAN IN ERODE


பா.ஜ.க தமிழக தலைவர் எல்.முருகன் நடத்தும், 'வேல் யாத்திரை'க்கு நீதிமன்றம் தடை போட்டுள்ளது. தமிழக அரசும் காவல்துறையும் இந்த யாத்திரையை நடத்தக் கூடாது எனத் தடை போட்டுள்ளது. ஆனால், அரசியல் விசித்திரம் போல் ஒவ்வொரு நாளும், ஒரு ஊரில் வேல்யாத்திரை, ஊர்வலம், பொதுக் கூட்டம் நடத்திவிட்டுப் பிறகு போலீஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.


அப்படி அரங்கேறும் காட்சி 20 ஆம் தேதி ஈரோட்டில் நடந்தது. ஈரோடு வந்த எல்.முருகன் காலையில், ஊர்வலமாகச் சென்னிமலைக்குச் சென்று மலை மீதுள்ள முருகக் கடவுளை தரிசித்து, மீண்டும் ஊர்வலமாக, பகல் 12.30 -க்கு ஈரோடு சம்பத் நகரில் நடக்கும், வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது,
 

"போலி சமூக நீதி, சமத்துவம் பேசும் திமுகவை, தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம்" என்ற அவர், "முருகன் என்பது ஒரு சொல் அல்ல, நமது வாழ்வின் ஒளி. பல்லாயிரம் ஆண்டு நாம் தொழுது வந்த இந்தக் கடவுளை, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் விடமாட்டோம். திருத்தணியில் ஆரம்பித்த வேல்யாத்திரை, அறுபடை வீடுகளுக்கும் செல்லும். கந்தசஷ்டி கவசத்தைக் கறுப்பர் கூட்டத்தினர் ஆபாசமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும் பேசினர்.

 

சென்னிமலையில் பாலதேவராயரால் அரங்கேற்றம் செய்யப்பட்ட கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு, தக்க பாடம் புகட்ட வேண்டும். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குப் பின்னணியில் உள்ள திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமூடியைக் கிழித்து பொதுமக்களுக்குக் காட்டவே இந்த யாத்திரை மேற்கொள்கிறோம்.

 

BJP L MURUGAN IN ERODE


நமது தாய்மார்கள், நவராத்திரி விரதம் இருந்து பூஜை செய்யும் நேரத்தில், பெண்களைக் கேவலமாகப் பேசியவர்களுக்கு, ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். அவர்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். அதனால்தான், நமது வேல் யாத்திரைக்கு வரவேற்பு கூடியுள்ளது.

 

திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்பதற்கு அவர்கள் கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.மான பூங்கோதையே உதாரணம். நேற்றைய தினம் தி.மு.க நிர்வாகிகளிடம் பூங்கோதை, காலில் விழுந்து மன்னிப்பு கோருகிறார். அவர்கள் கட்சிக்காரர்களாக இருந்தாலும், இதை எப்படி ஏற்க முடியும்? எனது சகோதரிக்கு ஒரு பங்கம் எனில், அதைத் தட்டிக்கேட்பது பாஜகவின் கடமை. பூங்கோதை ஆலடி அருணா பாதிக்கப்பட்டதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவிக்கிறது.


இந்நிலையில், பூங்கோதை தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வருகிறது. இன்று வரை இதற்குக் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆறுதல் தெரிவிக்கவில்லை. அவர்கள் கட்சியைச் சேர்ந்த, ஒரு எம்.எல்.ஏ.விற்கே பாதுகாப்பு இல்லை என்றால், நமது சகோதரிக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்?

 

cnc

 

நாளைக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால், யாரும் சுதந்திரமாக இருக்க முடியாது. பட்டியலின சகோதர்களுக்கும் தி.மு.க எதிராக உள்ளது. அவமரியதையாக பேசுகின்றனர். இதுதான் அவர்களின் சமூகநீதி. உண்மையான சமூகநீதி, சமத்துவம் பாஜகவிடம்தான் உள்ளது. போலி சமூகநீதி, சமத்துவம் பேசுகின்ற திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பாஜகவின் ஒரே நோக்கம். கறுப்பர் கூட்டத்தை, காவிக்கூட்டம் ஓட, ஓட விரட்டும்.


மத்திய அரசு விவசாயிகள், பெண்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  கரோனா காலத்தில் பா.ஜ.க தொண்டர்கள் செய்த பணியை. யாரும் மறுக்க முடியாது. அவர்களுக்கு நன்றி சொல்லவே இந்த யாத்திரை நடக்கிறது. நம் பண்பாட்டை, மரபுகளை இழிவுபடுத்துவோருக்குத் தக்க பாடத்தை புகட்டுவோம். தமிழகம் ஆன்மிக பூமி, தெய்வீக பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில், தமிழகத்தில் அடுத்து வரும் ஆட்சியை பாஜகதான் தீர்மானிக்கும். எத்தனை தடை வந்தாலும், இந்த யாத்திரை டிசம்பர் 7ஆம் தேதி திருச்செந்தூர் வரை சென்று சேரும்.." என்றார்.

தொடர்ந்து எல்.முருகன், துணைத் தலைவர்கள் அண்ணாமலை, நரேந்திரன் உள்ளிட்ட 1,000- க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகளை, வேனில் கூட்டிச் சென்ற போலீசார், தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மதிய உணவு கொடுத்து மாலையில் அனுப்பி வைத்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.