ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி மரியாதை நிகழ்வு நேற்று மதுரையில் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசியது கண்டனத்திற்குரியது. தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பாஜகவின் செயல் அருவருக்கத்தக்கது. தேசியக் கொடி பறந்த காரில் காலணி வீசியதன் மூலம் பாஜகவின் கீழ்த்தர அரசியலை மக்கள் உணர்ந்துள்ளனர். செருப்பு வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியலை தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது' என தெரிவித்துள்ளார்.