Skip to main content

''மிகவும் கவனமா இருக்கணும்... சர்வதேச போலீசாராலேயே ஒன்னும் பண்ண முடியல'' - தமிழக டிஜிபி எச்சரிக்கை

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

dgp

 

பிட்காயின் என்ற பெயரில் இணையத்தில் மிகப்பெரிய மோசடி நடந்து கொண்டிருப்பதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

 

முகநூல் பக்கத்தில் இது குறித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, "வணக்கம் பொதுமக்களுக்கான பதிவு இது. இப்பொழுது இணையதளத்தில் பிட்காயினில் இன்வெஸ்ட் பண்ணவைத்து மோசடி செய்வது நடந்து கொண்டிருக்கிறது. அதனை நம்பி மக்கள் முதலில் சின்ன அமௌண்ட்டை போடுகிறார்கள். அந்த அமௌண்ட்டுக்கு டபுள் அமௌண்ட்டை அவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். அதன்பிறகு இன்னொருமுறை இன்வெஸ்ட் பண்ணுறாங்க. அதற்கும் அமௌண்ட்டை டபுள் செய்து தருகிறார்கள். ஆனால் அடுத்தமுறை இன்வெஸ்ட் பண்ணும்பொழுது இன்னும் அதிகமாக இன்வெஸ்ட் பண்ணுங்க அப்போதான் மெம்பர்ஷிப் கிடைக்கும், அக்கவுண்டில் கொண்டு சேர்க்க முடியும் என்று பல்வேறு காரணங்களைக் காட்டி பெரிய தொகையை இன்வெஸ்ட் பண்ண வைத்து, பின்னர் ஒன்னுமில்லாமல் பண்ணிவிட்டுறாங்க. சென்னை கமிஷனர் சொல்லியிருக்கிறார், இந்த குற்றங்களைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய காவலர்களே பணத்தை விட்டு ஏமாந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே இந்தப் பணம் போச்சுனா கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். பணம் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போயிருச்சுனா சர்வதேச போலீசாரை நாடவேண்டி இருக்கும். சர்வதேச போலீசாராலேயே ஒன்னும் பண்ண முடியல. சென்னையில் ஒரு காவலர் 20 லட்சம், இன்னொரு காவலர் 30 லட்சத்தை இழந்திருக்கிறார்கள். பேராசையைத் தூண்டி உங்களை ஏமாத்திருவாங்க. பேராசை பெருநஷ்டம்'' என தெரிவித்துள்ளார். 


அண்மையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறையினர் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகுவது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'பிட் ஃபண்ட் மைன் இன்வெஸ்ட்மெண்ட் கம்பனி, ஆன்லைன் பிட்காயின் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தைக் கட்டி இரண்டு காவலர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இதுபோன்ற ஆசை அறிவிப்புகளை நம்பி பணத்தை இழந்துள்ளனர். காவலர்கள் தங்களது சேமிப்புகளைத் தரமான வங்கி மற்றும் முதலீடுகளில் செலுத்தி ஆதாயங்களைப் பெற வேண்டுமே தவிர இதுபோன்ற தீய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு ஏமாறக்கூடாது' எனத் தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்து தமிழக டிஜிபி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்