Skip to main content

போலி ரூபாய் நோட்டெல்லாம் பழசு... போலி காசோலை புதுசு... சேலத்தில் இருவர் கைது!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

bank cheque salem police investigation

 

சேலத்தில் போலி காசோலை தயாரித்து வங்கியில் இருந்து பணம் எடுக்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள சிமெண்ட் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருபவர் சதீஸ்குமார். இவர் செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

 

அந்த மனுவில், ''எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் எங்களிடம் வாங்கிய சரக்குக்கு உண்டான 9,337 ரூபாயை காசோலையாக எழுதிக் கொடுத்தார். அதை நாங்கள் தனியார் வங்கியில் செலுத்தி உரிய தொகையைப் பெற்றுக்கொண்டோம். ஆனால் அதே காசோலை எண்ணை பயன்படுத்தி வங்கியில் மீண்டும் வேறு ஒரு நபர் பணம் எடுக்க முயன்றார். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் எங்களுக்கு தகவல் அளித்தனர். மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தனர்.

 

இதையடுத்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரில் சென்று விசாரணை நடத்தினர். செவ்வாய்பேட்டை தேவாங்கபுரத்தை சேர்ந்த தேவி என்ற பெண்ணின் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்துமாறு அந்த காசோலை வங்கிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து அந்தப் பெண்ணிடம் விசாரிப்பதற்காக வீட்டை தேடிச்சென்றனர். வீட்டில் தேவியின் கணவர் மணிகண்டன் மட்டும் இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. களரம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மற்றொரு மணிகண்டன் மற்றும் அவரின் நண்பரான எருமாபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் தேவியின் கணவரான மணிகண்டனிடம் காசோலையை கொடுத்துள்ளனர். 

 

அப்போது அவர்கள், ''நாங்கள் அதிகளவில் காசோலை மூலம் பணம் பரிமாற்றம் செய்வதால் எங்களுக்கு அதிகளவில் ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படுகிறது. ஆகவே, நாங்கள் கொடுக்கும் காசோலையை மாற்றிக் கொடுக்க வேண்டும்,'' என்று தேவியின் கணவரிடம் கூறி காசோலையைக் கொடுத்துள்ளனர். இதற்காக அவருக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர். அதையடுத்துதான் அந்த காசோலையை வங்கிக் கணக்கில் செலுத்தி பணத்தை எடுக்க முயன்றிருப்பது தெரிய வந்துள்ளது. 

 

களரம்பட்டி மணிகண்டனிடம் விசாரித்தபோது, வங்கிக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த காசோலையை பெங்களூருவில் இருந்து ஒருவர் தனக்கு அனுப்பி வைத்ததாக முன்னுக்குப்பின் முரணாக கூறினார். பின்னர், அந்த காசோலையை போலியாக தயாரித்ததாகக் கூறினார்.

 

இதையடுத்து பிரகாஷ் மற்றும் களரம்பட்டி மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். போலி காசோலை குற்றச்செயலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.