Skip to main content

வீட்டிலேயே பிரசவம்; தாயும், குழந்தையும் உயிரிழப்பு

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Baby and mother passed away due to childbirth at home in Pattukottai

 

தஞ்சை மாவட்டம் , பட்டுக்கோட்டை  ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர்கள் செந்தில் - வசந்தி தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் வசந்திக்கு நேற்று இரவு பிரசவ வலி வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வசந்தியும், செந்திலும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். 

 

அப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் வசந்திக்கு ரத்தப்போக்கு நிற்காததால் அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.  ஆனால் வரும் வழியிலேயே வசந்தி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவிக்காமல் வசந்தியின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்ததுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

 

அதன்பேரில் வசந்தியின் வீட்டிற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் உள்ள இரு வாலியில் ரத்தக்கரை இருந்ததால் அதனை திறந்து பார்த்தபோது பிறந்து இறந்த குழந்தை ஒன்று இருந்திருக்கிறது. மேலும் அதன் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது. மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வறுமையில் வாடும் வசந்தி - செந்தில் தம்பதியினருக்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பதால், 6 குழந்தையை எப்படி வளர்ப்பது என்று, அதனை அழிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆனால் அதற்குள் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்து விட்டதால் இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொன்றதாகவும் தெரிகிறது. 

 

மேலும் இந்த பிரசவத்தை மருத்துவமனையில் நடத்தினால் எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்று நினைத்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வசந்தி மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்