Skip to main content

மரங்களின் காதலர் விதைத்த விழிப்புணர்வு... பிறந்தநாளில் கடல் கடந்து நட்டப்பட்ட மரக்கன்றுகள்!!  

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கற்பகசோலை 'மரம்' பெ.தங்கசாமி. சராசரி விவசாயியாக இருந்த மரம் தங்கசாமி, விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு கடனாளியாக இருந்தார். இவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, அவரது திருமணம். திருமணக் கோலத்தோடு தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு தனது இல்லறவாழ்வைத் தொடங்கினார்.

 

அதன் பிறகு, தேசியத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் என அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் என எந்த ஒரு நாளாக இருந்தாலும் அவர்கள் நினைவாக ஒரு மரக்கன்றை தன் தோட்டத்தில் நட்டார். மழை, வறட்சி அத்தனையும் தாங்கி வளரத் தொடங்கியது மரங்கள். பழ மரங்களைத் தேடி பறவைகள் வந்து, பலவகை மரக்கன்றுகளுக்கு விதைபோட்டது. நட்ட மரங்களைவிட பறவைகளால் விதைக்கப்பட்ட மரங்கள் அதிகம். இப்படித் உருவான தோட்டத்தின் மரங்கள், அவரின் கடனை அடைக்க உதவியது.

 

Awareness sown by the lover of trees ... on a birthday Planted saplings

 

மரங்களால் தனக்கு நட்டமில்லா வருமானம் கிடைப்பதை மற்றவர்களிடமும் கொண்டுசெல்ல நினைத்து, தான் கலந்து கொள்ளும் திருமணம், காதணி போன்ற விழாக்களில், மரக்கன்றுகளை நடுவதுடன், மணமக்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்து வந்தார். தொடர்ந்து பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, விழாக்களை தொடங்கி வைத்தார். இப்படித் தொடங்கிய அவரது இயற்கைப் பயணம் தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்தது. ஆண்டுக்கு ஒருமுறை சைக்கிளில் தமிழகம் முழுவதும் சுற்றி மரக்கன்றுகளை நடுவதுடன், பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டியதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருடன் தொடர்ந்து பயணித்தார். இப்படியாக தொடர்ந்த அவரது பயணத்தில், விழாக்களில் தாம்பூலப் பைக்கு பதில் மரக்கன்றுகளைக் கொடுக்க வலியுறுத்தி வந்தார். 

 

'மரப்பயிரும் பணப்பயிரே' என்ற வாசகத்துடன் தொடங்கிய அவரது புரட்சிப் பயணம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. இவரது இந்தப் பயணத்தை தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக, இவரது பெயரில் தமிழகத்தின் பல ஊர்களிலும் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 

cnc

 

இந்நிலையில், இன்று நவம்பர் 30 ஆம் தேதி, மரம் தங்கசாமி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சிங்கப்பூர், மலேசியா, குவைத், அமெரிக்கா, மாலத்தீவு போன்ற பல நாடுகளிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். கீரமங்கலம் காவல்நிலைய வளாகத்தில் மெய்யநாதன் எம்.எல்.ஏ மற்றும் கைஃபா, நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகளை நட்டனர்.

 

அதேபோல புதுக்கோட்டை, தஞ்சை  மாவட்டங்களில் கீரமங்கலம், செரியலூர், நெடுவாசல், அரசர்குளம், பேராவூரணி மற்றும் பல கிராமங்களிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். அதேபோல பெங்களூரு, சென்னை, டெல்லி, செங்கல்பட்டு என இந்தியாவில் பல இடங்களிலும் தமிழகத்தில் ஏராளமான ஊர்களிலும் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.

 

தனி ஒருவராக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை விதைத்தார். ஆனால் இன்று இளைஞர்கள் ஏராளமானோர் விதைக்கிறார்கள். எல்லாம் அவர் விதைத்த விழிப்புணர்வு தான் என்கிறார்கள் இளைஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.