துபாய், சிங்கப்பூர், மஸ்கட், ஓமன் போன்ற வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்திவருவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (30.10.2021) இரவு துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுரையைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற பயணி தனது உடலில் மறைத்துவைத்து கடத்திய 193 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 9.40 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்ததில் ஒரு பயணியிடம் இருந்து 770 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதன் மதிப்பு சுமார் முப்பத்து நான்கு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.