Skip to main content

ஆத்தூர் விபத்தில் 6 பேர் பலி; சொகுசு பேருந்து ஓட்டுநர் கைது 

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

attur bus and car incident police investigation in salem district

 
 ஆத்தூர் அருகே, ஆம்னி வேன் மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் ஆறு பேர் பலியான சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 29). இருசக்கர வாகன மெக்கானிக்.  

 

இவர், தன்னுடைய தங்கை ரம்யா (வயது 25), அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மகள் சந்தியா (வயது 23) ஆகியோருடன் ஆக. 22- ஆம் தேதி, ஆம்னி வேனில் சேலம் மாவட்டம், ஆத்தூர் லீ பஜாரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்.  

 

இதையடுத்து ராஜேஷ், சந்தியா, ரம்யா மற்றும் அவர்களின் உறவினர்களான ஆத்தூர்  முல்லைவாடியைச் சேர்ந்த சுதாகரின் மனைவி சரண்யா (வயது 23), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் மனைவி சுகன்யா (வயது 27), அவருடைய மகள் தன்ஷிகா (வயது 11) மற்றும் பெரியண்ணன் (வயது 23), புவனேஸ்வரி (வயது 17), கிருஷ்ணவேணி (வயது 45), உதயகுமார் (வயது 17), சுதா (வயது 35) ஆகிய 11 பேரும் தேநீர் குடிப்பதற்காக ஆக. 23- ஆம் தேதி அதிகாலை 02.00 மணியளவில், ஆம்னி வேனில் சென்றனர்.  

 

ஆத்தூர் அருகே துலுக்கனூர் பகுதியில், சேலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்துவிட்டு, மீண்டும் துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  

 

ஆத்தூர் சர்வீஸ் சாலையில் செல்வதற்காக அவர்கள் ஆம்னி வேனை சாலையின் குறுக்கே கடந்தபோது, அந்த வழியாக சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது.

 

இந்த விபத்தில் ராஜேஷ், ரம்யா, சந்தியா, சரண்யா, சுகன்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே  பலியாயினர்.

 

பலத்த காயம் அடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்ற 6 பேரையும் சேலம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தன்ஷிகா உயிரிழந்தார்.மற்றவர்களுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆக. 24- ஆம் தேதியும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த கோர விபத்து குறித்து ஆத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரித்தனர். விபத்துக்குக் காரணமான சொகுசு பேருந்தை ஓட்டி வந்த ஈரோட்டைச் சேர்ந்த முத்துசாமி (வயது 42) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சம்பவத்தின்போது பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா? பேருந்து அவருடைய கட்டுப்பாட்டை இழந்ததா? அல்லது, ஆம்னி வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.