Skip to main content

அவசரகதியில் திறக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று (26/02/2021) மாலை அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 

 

தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ‘ஸ்மெல்’ செய்துவிட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நேற்று (26/02/2021) மாலை 04.20 மணிக்கு ஆரம்பித்து 04.40-க்குள், உயர் கோபுர விளக்குகளை அவசரகதியில் திறந்துவைத்தார். 

 

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம், பொன்விழா மைதானம், தென்காசி சாலை உள்ளிட்ட 15 இடங்களில், தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட  ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டிலான உயர் கோபுர விளக்குகளை, சிமெண்ட் பூசியும் பூசாமலும், கல்வெட்டு பதிக்காமலும், அவசர அவசரமாகத் தேங்காய் உடைத்து, மாலை போட்டு, சூடம் கொளுத்தி தொடங்கி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவு” - திருமாவளவன் கண்டனம்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Thirumavalavan MP condemns the beaten kallakurichi student issues

“மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” எனப் பட்டியலின மாணவி மீது நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவி நீட் தேர்வு எழுதி மருத்துவம் பயிலும் கனவில் இருந்துள்ளார். அதற்காக அவர் வீட்டு வேலை செய்ய முடிவெடுத்து, திருவான்மியூர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் முகவர் ஒருவர் மூலம் வீட்டுப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். வீட்டு உரிமையாளர் அன்டோ மதிவாணன் என்பவர் பல்லாவரம் தொகுதியைச் சார்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். அவரது மனைவி மெர்லின் என்பவர் தான், மாணவியை குரூரமாகக் கொடுமைப் படுத்தியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

வீட்டு வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்தே பல மாதங்களாக மாணவிக்கு சம்பளம் வழங்காமலும், அவரது குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமலும், ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை வாங்கியதுடன், மனிதாபிமானமற்ற முறையில் அடித்துத் துன்புறுத்திக் கொடூரமாக வதைத்துள்ளாரென்று தெரியவருகிறது. இது மனிதாபிமானமுள்ள, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஈவிரக்கமற்ற இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி, கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாயின் அரவணைப்பில் வளர்ந்து மருத்துவராகும் கனவுடன் உழைத்திட வீட்டுப் பணியில் சேர்ந்துள்ளார். உழைத்துச் சம்பாதித்துப் படிக்கத் துடிக்கும் ஒரு ஏழைச் சிறுமியை ஊக்கப்படுத்த வேண்டிய பக்குவம் இல்லாமல், நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் இவர்களின் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கணவன் தனது மனைவியை அடிக்கவோ, பெற்றோர் தமது பிள்ளைகளை அடிக்கவோ, ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ கூடாது என்கிற 'மனித உரிமை' குறித்த விழிப்புணர்வு, உலகெங்கும் வளர்ந்துள்ள இக்காலச் சூழலில், இவர்களால் எப்படி இவ்வாறு நடந்து கொள்ளமுடிகிறது என்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. மாணவியை நள்ளிரவு வரை வேலை செய்யச்சொல்லி அடித்ததுடன், சாதியைச் சொல்லியும் இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் சொல்லி அந்த மாணவி கதறுவது நெஞ்சை உலுக்குகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பதினெட்டு வயதுக்கும் கீழாகவுள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் குற்றச் செயல்களைத் தடுத்திட அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தழுவிய அளவில் இது குறித்து விரிவான புலனாய்வை மேற்கொள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டுமெனவும் விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி அளிக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதுடன், அவருடைய மருத்துவக் கல்விக்கான கனவை நனவாக்கிட ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு விசிக சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

ஃபிரிட்ஜை திறந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்; மழைக்காலத்தில் ஜாக்கிரதை

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

nn

 

ஃபிரிட்ஜை திறந்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ராஜபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது வரகுணராமபுரம். இந்த பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. விடிய விடிய மின்சாரம் இல்லாத நிலையில் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத் தொழிலாளியான வாணி என்பவர் வழக்கம் போல காலையில் டீ வைப்பதற்காக ஃபிரிட்ஜில் இருந்து பாலை எடுக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி வாணி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட கணவர் மாரிமுத்து பலத்த காயமடைந்த வாணியை  உடனடியாக மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வாணி வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.