Armstrong case 3 more arrested

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) அன்று மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து தீவிரமாக விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

Armstrong case 3 more arrested

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார் மற்றும் முகுந்தன் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடி குண்டுகளை சப்ளை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட இரண்டு ரவுடிகளை 10 தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.