Skip to main content

அரசு கொறடாவின் ஆதரவாளர்கள் தி.மு.க. பிரமுகர் மீது கற்கள் மது பாட்டில்களை வீசி சரமாரி தாக்குதல்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

Ariyalur ADMK Thamarai rajenthiran DMK Selvakumar and sivasankar

 

 

அரியலூர் தொகுதியின் எம்.எல்.ஏ. தாமரை, அரசு கொறடாவாகவும் இருக்கிறார். ராஜேந்திரனுக்கு அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து சென்று சிறப்பு வரவேற்பு அளித்தனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் ஊர்வலமாக சென்றதால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும்  அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தி.மு.க பிரமுகரான அரியலூர் காந்தியார் தெருவை சேர்ந்த டென்சி என்கிற செல்வக்குமார், அரசு கொறடா ஊர்வலமாக சென்றபோது அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ஆத்திரமடைந்த அ.தி.மு.க அரியலூர் நகர செயலாளர் ஏ.பி.செந்தில், எழுத்துக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவா, மணிச்சந்திரன்  உள்ளிட்ட தாமரை. ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் 25க்கும் மேற்ப்பட்டோர் நேற்று இரவு, 11.30 மணியளவில் செல்வகுமார் வீட்டிற்கு குடிபோதையில் சென்று கற்கள், மதுபாட்டில்கள், கத்தி, கம்பி, உருட்டுக் கட்டைகளை வீசி எறிந்து கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள், வீட்டின் சுவர் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து செல்வகுமாரையும் அவரது மனைவி ராதாவையும் தகாத வார்த்தையில் பேசி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் காயமடைந்த செல்வக்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அவரது குழந்தைகள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதனிடையே தாக்குதல் சம்பவம் நிகழ்ந்த செல்வகுமாரின் வீட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அரியலூர் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தி.மு.க பிரமுகர் மீது அரசு கொறடாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் ஈடுபட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக அரியலூர் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவிக்கையில், “செல்வக்குமார், காவல்துறையிடம் தான் எதும் அவர்களை பேசவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அப்படியே அவர்களுக்கு சந்தேகமாக இருந்திருந்தாலும், காவல்துறையில் புகார் கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, குண்டர்களை கொண்டு அதுவும் இரவு நேரத்தில் அவரது மனைவி, குழந்தைகள் எல்லாம் இருக்கும்போது அத்துமீறி தாக்கியது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதபட்சத்தில், மாவட்ட திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெறும். சட்ட ஒழுங்கு கடைபிடிக்காமல் அதிமுகவினர் நடந்துகொண்டதும் அதற்கு அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் இருப்பதும் கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.