அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட குந்தபுரம் கிராமத்தில் பள்ளிக் குழந்தைகள் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்குழந்தைகளின் இந்த போராட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ’’கிராம மக்கள் பணமின்றி காய்கறிகள் வாங்கி, அடுத்த வேளை சோற்றுக்கே சிரமப்படுகிறார்கள். இந்த நேரத்தில் கரோனா பீதியில் உறைந்து போய் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்துவிட்டுள்ளனர். மேலும் தமிழக முதல்வர் அவர்களின் (7/5/2020 வியாழக்கிழமை அன்று) மதுக்கடை திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெந்தப்புண்ணிலே வேலைப்பாய்ச்சுவது போல உள்ளது. எங்கள் கிராமத்தில் பலரும் குடியை மறந்து நல்லா இருக்காங்க.
இதனால எங்க பெற்றோர்களும், உறவினர்களும் குடிபோதையிலிருந்து மீண்டுள்ளனர் என்பது ஊரறிந்த உண்மை. எனவே எங்க கிராமத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கடை திறப்பு அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என பள்ளிக்குழந்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பள்ளிக்குழந்தைகளின் இந்த செயல் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மதுக்கடை திறக்க வேண்டாம் என சிறுவர்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் எடப்பாடி அரசு கடையை திறப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. மதுக்கடை திறந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆந்திராவில் நடந்த சம்பவம் ஒரு உதாரணம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சொக்கலிங்கம் இவருக்கு ஜெகதாம்பாள் என்ற மனைவியும் நந்தினி என்ற மகளும் இருந்தனர் சொக்கலிங்கம் தீவிர மதுப்பிரியர். அரசு தடை உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக மது குடிக்காமல் தன் மனைவியோடும் மளோடும் சந்தோஷமாக வீட்டில் இருந்துள்ளார். இனிமேல் நான் குடிப்பதில்லை என்று மனைவி, மகளிடம் கூறி வந்துள்ளார் சொக்கலிங்கம். இதைக்கேட்டு அவரது மனைவியும் மகளும் மிகவும் சந்தோஷமடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. அன்றே மது கடைக்கு சென்ற சொக்கலிங்கம் மது குடித்துவிட்டு, மது பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதைக்கண்டு வேதனையுற்ற அவரது மனைவி ஜெகதாம்பாள் கணவரிடம் மீண்டும் குடிக்கலாமா என்று கேட்டுள்ளார். இதனால் கோபமான சொக்கலிங்கம் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த மனிதர் இனி திருந்தமாட்டார் நாம் இனி நிம்மதியாக வாழ முடியாது என்ற விரக்தியில் ஜெகதாம்பாள் தனது மகள் நந்தினியோடு சேர்ந்து, இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைகள் தமிழகத்திலும் வரக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று பொது மக்களும் தலைவர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இதற்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளை மதுக் கடைகளை திறக்க கூடாது என வழக்கு தொடுத்துள்ளனர். காரணம் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு சொல்லும் காரணங்கள் நியாயமானதாக இல்லை என்பதாலும், மேலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் கடந்த 40 நாட்களாக தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலைக்கு போகாமல் வருமானமின்றி உள்ளனர்.
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் உதவியைகொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மதுக் கடைகளை திறந்தால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும், மது அத்தியாவசியமான பொருள் அல்ல அதோடு மது கடைகள் திறப்பதால் வைரஸ் தொற்று பரவும். இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள். அரசு கூறியுள்ள விதிமுறைகளின்படி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் இடைவெளியை பின்பற்ற மாட்டார்கள்.
40 நாட்களாக மதுக்கடைகள் மூடி இருந்தபோது அதை திறக்கக்கோரி யாரும் போராடவில்லை. எனவே தமிழகத்தில் கரோனா நோய் தொற்று இல்லை என்ற கட்டத்தை அடையும் வரையிலாவது மதுக்கடைகளை திறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர். எனவே பேரிடர் காலமான இந்த காலகட்டத்தில் தமிழக அரசிடம் பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதிலும் கடந்த 40 நாட்களாக அரசு மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தது. டாஸ்மாக் கடை திறப்பதன் மூலம் தமிழக அரசு செயலிழந்து விட்டது. அரசுக்கு ஒரு கரும்புள்ளி ஏற்படும் என்றனர்.