Skip to main content

எதிர்த்து போராடுபவர்கள் அறிவற்றவர்களா? ஒரு விவரமும் அறியாதவர்களா? - சீமான் காட்டம்! 

Published on 19/12/2020 | Edited on 20/12/2020

 

seeman

 

வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி இந்தப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி செய்துகொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருள் அவசரச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான வணிக விரிவாக்கம் என்கின்ற ஒரு அவசரச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மீதான பாதுகாப்பு ஒப்பந்தம், ஒப்பந்த விவசாயம் என்ற சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. உழைக்கும் மக்களைக் கூட்டிணைவு நிறுவனங்கள், அதாவது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமைகளாக, கூலிகளாக மாற்றுகின்ற வேலையை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கல்விக் கொள்கை, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே வழி என்று கொண்டுவந்த இந்த ஆட்சியாளர்கள் ஒரே சந்தை என்று கொண்டு வருவதற்குத்தான், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 

இங்கு உற்பத்தி செய்கிற, விளையவைக்கிற பொருளை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கொண்டுசென்று விற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எங்கள் விவசாயிகள் விளைவிக்கும் தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயத்தை எடுத்துக்கொண்டு சென்று மகாராஷ்டிரா, பீகாரில் விற்க முடியுமா? யாரைத் தொடர்பு கொள்வது, இதற்கான போக்குவரத்தை எல்லாம் யார் கொடுப்பது. அத்தியாவசியப் பொருளில் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், பருப்பு, எண்ணெய், போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று இந்தச் சட்டம் சொல்கிறது. இவையெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என இந்தச் சட்டம் சொல்லிவிட்டால் இந்தப் பொருட்களெல்லாம் அத்தியாவசியப் பொருளாக இல்லாமல் ஆகிவிடுமா?

 

அத்தியாவசியப் பொருளாக இவையெல்லாம் இருக்கும்பொழுதே ஒரு செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். வெங்காயம், பருப்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெங்காய விலை, பருப்பு விலை அதிகரித்துப் போகிறது. இப்படி இருக்கும் நிலையில் அத்தியாவசியப் பொருளாக இது இல்லை என்றால், தக்காளி அதிகமாக மகசூல் ஆகும் நேரத்தில் தக்காளியை அதிகப்படியாகக் கூட்டிணைவு நிறுவனங்கள் வாங்கி, சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்துக்கொண்டு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி பெரிய அளவில் லாபம் வைத்து விற்பார்கள்.

 

ஒரு கிலோ தக்காளி 500 ரூபாய், 1,000 ரூபாய் என்று சொன்னாலும் வியப்பதற்கு இல்லை. இந்த நிலையை இந்தச் சட்டம் உருவாக்குகிறது. ஆனால், இதைச் சரியான சட்டம் என்று சொல்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட இப்படிச் சொல்கிறார். மத்தியில் ஆள்கின்ற தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அல்லது வேளாண்துறை சார்ந்த அமைச்சர்கள் அல்லது மூத்த தலைவர்கள் யாராவது ஒருவர் இந்தச் சட்டத்தில் இருக்கக்கூடிய அம்சங்கள் வேளாண் குடிமக்களுக்கு நன்மைகள் இருக்கிறது என்று விளக்கமுடியுமா? ஒருமுறை பேசுங்கள் பார்ப்போம்.

 

cnc

 

எதிர்த்துப் போராடுபவர்கள் அறிவற்றவர்களா? ஒரு விபரமும் அறியாதவர்களா? வேலையை விட்டுவிட்டு இவ்வளவு தூரம் சென்று போராடிக் கொண்டிருப்பவர்கள் பைத்தியக்காரர்களா? இந்தச் சட்டத்தால் வேளாண்குடி மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு ஏற்காது என்று சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது. சரியான சட்டம் தானே... நல்ல சட்டம் தானே... நீங்கள் சொல்லும்படி பார்த்தால், பிறகு ஏன் அதற்குப் பொறுப்பேற்க முடியாது என்று தப்பிக்க வேண்டும். அதேபோல் இது தொடர்பாக  நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுக்க முடியாது என்று கூறுவது ஏன்?  பேராபத்தில்  கொண்டுபோய்ச் சேர்த்துவிடும் இது.

 

தமிழகம் எல்லாச் சட்டங்களையும் எதிர்க்கிறது என்று கூறுகிறார்கள். கூட்டணி வைத்து விட்டோம் என்பதற்காக எல்லாவற்றுக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.