Skip to main content

“கோவில் சொத்துக்களை ஒரு சாதி ஆக்கிரமிக்க முயற்சி” – அர்ச்சகர் பயிற்சி பெற்ற சங்கத் தலைவர்

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

Archakar trained association leader said thiruvannamalai temple issue

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெரும் 100க்கும் அதிகமான மாணவர்களுக்கு, தமிழ் முறைப்படியான குடமுழுக்கு, தமிழ் வேள்விகள், ஒவ்வொரு கடவுளுக்குமான தமிழ் வழிபாட்டு முறைகள், அர்ச்சனைக்கான போற்றி நூல்கள் போன்றவற்றை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன், கோவில் இணை ஆணையர் முன்னிலையில் வழங்கினர்.

 

அதன்பின் நம்மிடம் பேசியவர், “தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையை இழுத்து மூடிவிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்து வழிபாட்டாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புதான் அண்ணாமலையின் இந்த அறிவிப்புக்கு காரணம். பழனி கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தவுடனே அறநிலையத்துறையை இழுத்து மூடுவோம் என்று அண்ணாமலை அறிவித்திருப்பது இதில் குறிப்பிடத்தக்கது.

 

பார்ப்பனரல்லாத மற்ற சாதியினர் யாரும் அர்ச்சகராகக்கூடாது என்பது மட்டுமல்ல, சிதம்பரம் கோவிலைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கோயில்களையும் தனிப்பட்ட சொத்தாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், திருக்கோவில்களில் இருந்து தமிழையும், தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பதும்தான் இவர்களது நோக்கம்.

 

2009 – 2023 ஆம் ஆண்டுகளில் இந்து அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சந்தித்து ஆகமக் கோவில்களில் எங்களை பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து சந்தித்து வருகிறோம். இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி போன்ற அனைத்து அமைப்புகளையும் சந்தித்து ஆதரவு கேட்டோம். அவர்கள் எங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை. கிராம கோவில்களில் மட்டும்தான் நீங்கள் பூஜை செய்ய வேண்டும் பரம்பரையாக உள்ள கோவில்களில் அவர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்றார்கள்.

 

இந்து முன்னணி ராமகோபாலனை சந்திக்கும்போது உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். பணமோ, வேலையோ உங்களுக்கு ஏற்பாடு பண்ணுகிறேன். இதையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள் என்றார். இந்து முன்னணியால் கொலை மிரட்டலுக்கு ஆளானேன்; தாக்கப்பட்டேன்; இப்போதும் தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டுதான் இருக்கிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களுக்காக கருவறை தீண்டாமை முடிவு கட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும். திருச்சி குமார வயலூர் கோயிலில் திமுக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் இரண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களைப் பணி நீக்கம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் இந்து வழிபாட்டாளர் சங்கம். 

 

கோவில்களும், கோவில்களின் சொத்துக்களும் இந்து மக்கள் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் அபகரிக்கும் நோக்கத்துடன்தான் இந்து அறநிலையத்துறையை ஒழிக்க முயல்கின்றனர். கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதனால்தான் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்துள்ளார். ஆறு அர்ச்சகர் பயிற்சி மையங்களையும் தொடங்கி வைத்துள்ளார். அரசின் இந்த முயற்சிகள் அனைத்துக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உறுதுணையாக இருக்கும்.

 

பக்தி என்ற போர்வையில் சாதிய ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்த துடிக்கும் சனாதன சக்திகளின் முயற்சியைத் தடுப்பதற்கு அர்ச்சகர் பயிற்சி முடித்து பணி நியமனம் கிடைக்காமல் இருக்கும் 16 மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கி, சமூகநீதியை நிலைநாட்டவும், தமிழ் வழிப்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரங்கநாதன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூன்று மணி நேர தேடுதலுக்குப் பின் உடல்கள் மீட்பு; கிரிவலம் சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nn

செஞ்சி அருகே சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் - சத்யா தம்பதி தங்களது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்தனர். திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள புலிவந்தி கிராமத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் நள்ளிரவில் விழுப்புரம் கப்பை கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஒன்பது பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் நீரில் தத்தளித்து பின்னர் கிணற்றில் இருந்து வெளியேறினர்.

இதில் ஆட்டோ  ஓட்டுநரின் மகன்கள் பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கிணற்றிற்குள் இறங்கி நடத்திய சுமார் 3 மணி நேர தேர்தலுக்குப் பிறகு இரண்டு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட உடல்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செஞ்சி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆட்டோ விவசாய கிணற்றில் கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

திருவண்ணாமலையில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் பிரம்மாண்டமான பந்தலில் உலக நன்மைக்காக எனச் சொல்லி ஒரு பெரும் யாகம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த யாகத்தில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் கோலிவுட் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருப்பது தமிழ்நாட்டு திரை ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் ஜப்பானில் சிவ பக்தர்கள் இருப்பதும் அவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற்ற யாகத்தில் வந்து கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மக்களிடத்தில்.

ஜப்பானில் குடும்பத்தோடு வாழும் தொழிலதிபர் தியாக குறிஞ்சி செல்வன், அவரது மனைவி மருத்துவர் விஜயலட்சுமி இருவரும் சிதம்பரம் தீட்சதரர்களை சென்னையைச் சேர்ந்த அகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இந்த மகா யாகத்தை நடத்தினர்.

உலக நன்மைக்காக தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இந்த யாகத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து குருநாதர் மசாகி அவயமா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சிவபக்தர்களான அண்ணாமலையார் பக்தர்கள் இதற்காகவே வந்து கலந்து கொண்டதை உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மோகன், சூரி, ஜீவா, ஸ்ரீகாந்த், கணேஷ், ஆர்த்தி கணேஷ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஸ்ரீ ரம்யா, ஜனனி ஐயர், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பாடகி தான்யஸ்ரீ, பாடகி அனிதா, பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் யாகத்தில்  கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி பிரமாண்டப்படுத்தியிருந்தனர். ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா வை சேர்ந்த சிவபக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கவும், கிரிவலம் வர குவிந்து வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்தவர்கள் அண்ணாமலையார் பக்தர்களாக திருவண்ணாமலை வந்திருந்ததை அங்கு வந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.