Skip to main content

கோயில் அர்ச்சகர்கள் நியமனம்: புதிய விதிகளுக்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் 

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

Appointment of temple priests; New rules cannot be barred .. - High Court

 

கோயில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத் துறையின் புதிய விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எந்த இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பணி நியமனங்கள் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

 

கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதில், 18 வயதிலிருந்து 35 வயதுவரையிலான நபர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் மூன்று ஆண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் விதிகள் உள்ளன.

 

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் முத்துகுமார் மற்றும் சிஐடி நகரைச் சேர்ந்த எஸ். ஸ்ரீதரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்னும் இடத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் பரம்பரை பூசாரிகள் எட்டு பேர் உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், டி.ஆர். ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று (20.10.2021) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும், பரம்பரை அறங்காவலர்களால்தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் 28க்கும் மேற்பட்ட ஆகம விதிகள் உள்ளன. அந்த ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், ஆகம விதிகளை மீறி அர்ச்சகர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

 

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனால் அர்ச்சகர் பணி நியமனங்கள் உயர் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.