Skip to main content

காட்டாற்று வெள்ளத்தையும் கடந்து சென்று நிவாரணம் வழங்கிய அப்பாவு! (படங்கள்) 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருப்பவர் அப்பாவு. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். தொடக்கத்தில் அரசியல் கட்சியான த.மா.க. மூலம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, பின்னர் தன் சொந்த செல்வாக்கால் சுயேட்சையாகக் களம் கண்டு இரண்டாம் முறை எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வாக்கு எண்ணிக்கை அவருக்குச் சாதகமாக இருந்தும் ‘ஜெ’ ஆட்சியின்போது நூலிழையில் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் பொறுமை காத்த அப்பாவு, இம்முறை எம்.எல்.ஏ.வாகி தன்னுடைய 69ஆம் வயதில் சட்டப்பேரவையின் தலைவராகியிருக்கிறார்.

 

ஆசிரியர், எம்.எல்.ஏ. என்ற பொறுப்புகளைக் கொண்டாலும், ராதாபுரம் தொகுதியின் இண்டு இடுக்கெல்லாம் இவரது விரல் நுனியில். வானம் பார்த்த பூமியான ராதாபுரம் தொகுதி, குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாகக்கொண்ட பகுதி. இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ ஆனபோது தொகுதி முழுக்க கிராமங்களில் முதன்முதலாக மோட்டார் பம்ப்புடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டியை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு தணித்தவர். அப்பாவு எம்.எல்.ஏ. அறிமுகப்படுத்திய இப்புதிய திட்டம் பின்னர் தமிழ்நாடு முழுவதும் செயல்படுவதற்குக் காரணமாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட, அடைமழையாய் கொட்டித் தீர்க்கிறது. மேலும், இடைநில்லாமல் மழை பொழியும் கன்னியாகுமரியை ஒட்டியிருப்பதால், அம்மாவட்டத்தின் மழையின் தாக்கம் அருகிலுள்ள ராதாபுரம் தொகுதியையும் பதம் பார்த்திருக்கிறது. இதன் காரணமாக ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல கிராமங்களில் கடும் பாதிப்பு. இதனையறிந்த சபாநாயகர் அப்பாவு தன்னோடு சிலரை அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குப் போயிருக்கிறார். அது சமயம் கடும் வெள்ளம் காரணமாக கொமந்தான்குளம் கிராமத்திற்குள் செல்லும் தரைப்பாலத்திலும் தைலம்மாள்புரத்தின் வடக்கு தரைப்பாலத்திலும் அரிப்பு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டதால், அங்கு செல்ல முடியாத நிலை. 

 

அப்போது அங்கு வந்த சபாநாயகர் அப்பாவுவிடம், “வெள்ளமிருப்பதால் வர வேண்டாம். வடிந்த பின் வாருங்கள்” என்று மக்கள் சொல்லியும், சபாநாயகரோ “நான் எப்படியும் வந்து உங்களை நேரில் பார்ப்பேன். அதற்காகத்தான் வந்துள்ளேன்” என்றவர், அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு ஆபத்தான காட்டாற்று வெள்ளத்தைக் கடந்து சென்று, அங்குள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி, ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

அந்தப் பகுதியில் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட லெட்சுமணன் என்பவருக்கு ரூபாய் 5,000 பணம் மற்றும் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார் சபாநாயகர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் வழங்கவும், இயற்கை பேரிடர் கால நிவாரண நிதியின் மூலம் வீடு இழந்தவர்களுக்கு உடனடியாக வீடு கட்டித்தர ஏற்பாடுகளை விரைந்து செய்வதுடன், போர்க்கால அடிப்படையில் அரித்துச் செல்லப்பட்ட கொமந்தான்குளம் சைதம்மாள்புரம் பாலம் புதிதாகக் கட்டப்படும் என்று உறுதியாகச் சொன்னவர், வள்ளியூர் பெரியார் சமத்துவபுரத்தில் ஒழுகும் வீடுகளை ஆய்வுசெய்து உடனடியாகச் சரிசெய்ய உரிய அதிகாரிகளை விரைவுப்படுத்தியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.