Skip to main content

இனிமேதான் கிடுக்கிப்பிடி விசாரணை இருக்கு!! தங்கமணி வீடுகளில் ரெய்டு குறித்து ர.ர.க்கள் மத்தியில் பேச்சு! 

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

Anti Corruption raid in Thangamani house and his son house
தரணிதரன் வீடு

 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன். இவருக்குச் சொந்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரில் சொகுசு பங்களா உள்ளது. இவருடைய வீட்டுக்கு பக்கத்து தெருவில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடும் இருக்கிறது. தரணிதரன் வீட்டில் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் தலைமையிலான போலீசார், புதன்கிழமை (டிச. 15) சோதனை நடத்தினர். 

 

காலை 6.30 மணியளவில் தொடங்கிய சோதனை, மாலை 6 மணிக்கு முடிந்தது. அவருடைய வீட்டில் இருந்து போலீசார் ஒரு சிறிய கைப்பையை மட்டும் எடுத்துச் சென்றனர். அதில் சில ஆவணங்களும், ஒரு செல்போனும், ஒரு சிறிய டைரியும் எடுத்துச் சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தரணிதரன் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில், சேலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள அஷ்வா பார்க் நட்சத்திர விடுதியிலும் சோதனை நடந்தது. குழந்தைவேலு என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியில், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

 

மேலும், சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள குழந்தைவேலுவின் வீடு, மறவனேரியில் உள்ள தரணிதரனின் ஆடிட்டர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் பெரிய அளவில் பணமோ, நகைகளோ சிக்கவில்லை.

 

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை குறித்து அதிமுக புள்ளிகள் சிலரிடம் பேசினோம். ''சேலம், நாமக்கல், ஈரோடு வழித்தடத்தில் ஓடும் தனியார் பஸ்களில் 40 சதவீதம் தங்கமணியின் பினாமியின் பெயர்களில்தான் இயங்குகின்றன. உதாரணமாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த முருக கடவுள், கிருஷ்ணர் கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான அனைத்து பஸ்களையும் தங்கமணிதான் பினாமிகள் மூலம் வாங்கியிருப்பதாக அதிமுக கட்சிக்குள்ளேயே பலமான பேச்சு உண்டு. 

 

th

 

இதில் கிருஷ்ணர் கடவுள் பெயரிலான நிறுவனத்திடம் இருந்து 7 பஸ்களை தலா 7 கோடி ரூபாய்க்கு வழித்தட உரிமையுடன் தங்கமணி தரப்பில் வாங்கியுள்ளனர். முருக கடவுள் பெயரிலான டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து 4 பஸ்களை, வழித்தட உரிமையுடன் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பஸ்களை தலா 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இவ்விரு நிறுவன உரிமையாளர்களுக்கும் நிறைய அழுத்தம் கொடுத்தே வாங்கியுள்ளனர். ஆனால், சந்தேகத்திற்குரிய பஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஒரு இடத்தில் கூட போலீசார் சோதனை நடத்தாதது வியப்பாக இருக்கிறது.

 

கடந்த ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள், பிரதான இடத்தில் உள்ள சொத்துகளை குறி வைத்துவிட்டால் அவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுவார்கள். அவ்வாறு எக்கச்சக்கமான சொத்துகளை சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்து, பினாமி பெயர்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

எதிர்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் வரலாம் என்பதால், யாரிடம் இருந்து சொத்துகளை வாங்குகிறார்களோ அந்த சொத்துகளை அதே உரிமையாளர்களின் பெயர்களிலேயே தொடரச் செய்து வருகின்றனர். அதனால்தான் இப்போது நடந்த சோதனைகளின்போது கூட பெரிய அளவில் பணமோ, நகைகளோ, ஆவணங்களோ சிக்கவில்லை” என்கிறார்கள் அதிமுக புள்ளிகள். 

 

இது தொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கேட்டபோது, ''வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எப்.ஐ.ஆர். பதிவு செய்வதும், அதன்பேரில் புகாருக்கு ஆளானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதும் சட்டப்பூர்வமான சம்பிரதாய நடவடிக்கைகள்தான். இதன் பிறகு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவருடைய பினாமிகளாக சந்தேகப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விடுவோம்.

 

விசாரணையின்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் பல புதிய இடங்களில் சோதனைகள் தொடரலாம். புதிதாக சிலர் மீது வழக்குகளும் பாயக்கூடும். இப்போது நடந்த சோதனையை வைத்து எதையும் இறுதி செய்துவிட முடியாது. இதெல்லாமே ஆரம்பம்தான். இனிமேல்தான் கிடுக்கிப்பிடி விசாரணையே இருக்கிறது. 

 

கடந்த 2017க்குப் பிறகு பத்திரப்பதிவுத்துறையில் நடந்த அதிக மதிப்பிலான கிரைய ஒப்பந்தங்கள் தொடர்பான விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். அதன் மீதும் விசாரணை நடந்து வருகிறது. தங்கமணியின் பினாமிகள் ஆந்திராவில் நிறைய இடங்களில் முதலீடு செய்துள்ளனர். அந்த மாநிலத்தில் மேலும் சில இடங்களில் சோதனை நடத்தப்படும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.