Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் வெளியீடு!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Annamalai University released Student Rankings Online!

 

அண்ணாமலை பல்கலைகழகம் ஆன்லைன் மூலம் வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

வேளாண் புலத்தில் 8,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 8,346 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 21 நபர்கள் மாற்றுத்திறனாளிகள். இதுபோல வேளாண் புலத்திலுள்ள சுயநிதிப் பிரிவில் 2,815 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 2,727 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தோட்டக்கலையில் சேர்வதற்கு 1,669 மாணவர்கள் விண்ணப்பித்து அதில் 1,628 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதைத் தவிர, தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறைகளுக்கான பட்டயப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. 

 

இதில் வேளாண்துறையில், வெள்ளக்கோயில் ஊரைச் சேர்ந்த சுவாதி 197.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றார். கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி 196 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும், சிதம்பரத்தைச் சேர்ந்த அபிராம ஸ்ரீ 193 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

 

வேளாண்துறை சுயநிதிப் பிரிவில் கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி 196 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கும்பகோணத்தைச் சேர்ந்த அபி ராகுல் 190 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், கரிமங்கலத்தைச் சேர்ந்த சன்மதி 189 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். 


இதுபோலவே, தோட்டக்கலைத் துறையில் காளையார்கோயிலைச் சேர்ந்த அல்ஃபினா 192 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஈரோட்டைச் சேர்ந்த கவிந்தரன் 197 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும், திருவட்டாரைச் சேர்ந்த தர்ஷினி 189.5 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

 

அனைத்து விவசாய, தோட்டக்கலை பட்ட மற்றும் பட்டயப் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும். இதற்கான விபரங்கள் இரண்டு தினங்களில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிட்டு அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பப்படமாட்டாது என்றும் கூறினார்.

 

தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் பேராசிரியர் வே.முருகேசன் வெளியிட பதிவாளர் பேராசிரியர் இரா.ஞானதேவன் பெற்றுக்கொண்டார். இதில் வேளாண் புல முதல்வர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குநர், அகடமிக், AIC, மாணவர் சேர்க்கை ஆலோசகர், மற்றும் வேளாண்புல துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.