Skip to main content

அரசு அலட்சியப்படுத்தினால் போராட்டம்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

annamalai university medical college students congress party ks alagiri


அரசு அலட்சியப்படுத்தினால் மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே வசூலிக்கக்  கோரி, கடந்த 46 நாட்களாகப் பெற்றோர்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள்.

 

மாணவர்கள் விடுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சர். துணை முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பாக மாணவர்கள் மனு அளித்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது என்று மாணவர்கள் வேதனைப்படுகிறார்கள்.

 

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாகக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் போராடுவதில் நூறு சதவிகிதம் நியாயம் இருக்கிறது.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடந்த 2013- ஆம் ஆண்டு முதல், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அரசால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைவிட, 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளைவிட 3 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

கடந்த 2013 முதல் 2020- ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை மானியம் மற்றும் நிதியாகத் தமிழக உயர் கல்வித்துறை வழங்கியுள்ளது. மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் மற்றும் உதவியை விட, இது 45 முதல் 50 சதவிகிதம் அதிகமாகும். 

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முறைகேடுகள் நடப்பதைத் தமிழக அரசு கண்டுபிடித்தது. இதனையடுத்து, பழைய நிர்வாகம் முற்றிலும் கலைக்கப்பட்டு, உயர் கல்வித்துறை அமைச்சர் சார்பு வேந்தராக நியமிக்கப்பட்டார்.

 

இந்த மருத்துவக் கல்லூரி 1929- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 2013- ஆம் ஆண்டு வரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி வரை அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2013 முதல் 2021- ஆம் ஆண்டு வரை, ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.

 

அரசின் உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கிய போதிலும், பல்கலைக்கழகத்துக்கு ஆகும் செலவில், 10-ல் ஒரு பங்கு மாணவர்களிடம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணமாக மாணவர்களிடம் ரூபாய் 1 லட்சம் வரை வசூலித்தபோதும், தேர்வுக் கட்டணத்துக்கு ஆகும் செலவில், 11 இல் 1 மடங்கு மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படுகிறது.

 

அரசிடமிருந்து ரூபாய் 2 ஆயிரத்து 500 கோடி வரை மானியம் பெற்ற போதிலும், கல்விச் செலவுக்காக 10 இல் ஒரு பங்குத் தொகையை மட்டுமே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஒதுக்குகிறது. ஒட்டுமொத்த தொகையையும் பயன்படுத்திக் கொள்ளாமல், மொத்த செலவையும் மாணவர்கள் கல்விக் கட்டணத்திலிருந்து ஈடுசெய்வது எந்த வகையில் நியாயம்?

 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 13,600 ரூபாயும், எம்.டி./எம்.எஸ். படிப்புக்கு ரூபாய் 30 ஆயிரமும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு 11,610 ரூபாயும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 30 ஆயிரமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், எம்.டி/எம்.எஸ் படிப்புக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

அதேசமயம், அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரமும், எம்.டி./எம்.எஸ். படிப்புக்கு 9 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும், பல் மருத்துவ இளங்கலைப் படிப்புக்கு ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரமும், பல் மருத்துவ முதுகலைப் படிப்புக்கு ரூபாய் 7 லட்சத்து 8 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்டண நிர்ணயம் நியாயமற்றது, பாரபட்சமானது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண அளவையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிப்பது தான் சரியானதாக இருக்கும்.

 

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலோர் ஏழ்மையான மற்றும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். கல்விக்கடன் பெற்றே இவர்கள் இங்கு படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்த போதிலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளை விடக் கல்விக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

cnc

 

இந்த அநீதியை எதிர்த்துத் தான் கடந்த 46 நாட்களாக மாணவர்களும் பெற்றோர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 20- ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தையும் அவர்கள் தொடர்ந்துள்ளனர். அவர்களது கோரிக்கையை மனசாட்சியுடன் பரிசீலித்து உடனடியாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தையே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயிக்குமாறு  தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்த கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்துமேயானால், அவர்களுக்குத் தோள் கொடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டக் களத்தில் குதிக்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்'. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.